பண்ட்வாலில் தலித் சிறுமி கூட்டு பலாத்காரம் ; 3 பேர் கைது


பண்ட்வாலில் தலித் சிறுமி கூட்டு பலாத்காரம் ; 3 பேர் கைது
x
தினத்தந்தி 31 July 2023 6:30 PM GMT (Updated: 31 July 2023 6:31 PM GMT)

பண்ட்வாலில் தலித் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 3 வாலிபர்களை போலீசார் ‘போக்சோ’வில் கைது செய்துள்ளனர்.

மங்களூரு-

பண்ட்வாலில் தலித் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 3 வாலிபர்களை போலீசார் 'போக்சோ'வில் கைது செய்துள்ளனர்.

கூட்டு பலாத்காரம்

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா விட்டலா பகுதியை சேர்ந்த சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். தலித் சமூகத்தை சேர்ந்த அந்த சிறுமியை 3 பேர் தொடர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது. மேலும் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளனர். இதனால் பயந்துபோன சிறுமி இதுபற்றி வெளியே யாரிடமும் கூறவில்லை.

இதனால் 3 பேரும் அந்த சிறுமியை தொடர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

போலீசில் புகார்

இதனால் சிறுமியை அவளது பெற்றோர் விட்டலா ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவள் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதனை கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவளிடம் விசாரித்தனர். அப்போது தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி சிறுமி கதறி அழுதுள்ளாள்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் விட்டலா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் 'போக்சோ' மற்றும் தலித் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்தனர்.

3 வாலிபர்கள் கைது

மேலும் விசாரணையில், கடந்த 2019-ம் ஆண்டில் இருந்தே சிறுமியை அவர்கள் 3 பேரும் தொடர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. இந்த நிலையில் தலித் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ததாக மூடபித்ரியை ேசர்ந்த அக்ஷய் தேவடிகா (வயது 25), பேயாறு பகுதியை சேர்ந்த கமலாக்ஷா (30), பேரிபடாவை சேர்ந்த சுகுமார் (28) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களில் அக்ஷய் பெயிண்டராகவும், கமலாக்ஷா மேஸ்திரியாகவும், சுகுமார் கார் டிரைவராகவும் வேலை பார்த்து வந்தனர். 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story