புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை ஒட்டி ரூ. 75 நாணயம் அறிமுகம் - மத்திய அரசு அறிவிப்பு


புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை ஒட்டி ரூ. 75 நாணயம் அறிமுகம் - மத்திய அரசு அறிவிப்பு
x

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை ஒட்டி ரூ. 75 நாணயம் அறிமுகம் செய்ய இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை ஒட்டி ரூ. 75 நாணயம் புழக்கத்திற்கு விடப்படுவதாக மத்திய நிதித் துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. புதிய நாணயத்தின் ஒருபுறம் அசோகா சின்னமும், அதன் கீழே சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தையும் இடம்பெறுகிறது. இடதுபுறத்தில் பாரத் என்ற வார்த்தை தேவனகிரியிலும், இந்தியா என்ற வார்த்தை ஆங்கிலத்தில் வலதுபுறமாக இடம்பெறுகிறது.

இத்துடன் இந்திய ரூபாய் சின்னம் மற்றும் 75 என்ற எண் அசோகா சின்னத்தின் கீழ் இடம்பெறுகிறது. நாணயத்தின் மற்றொரு புறத்தில் பாராளுமன்ற கட்டிடத்தின் படம் இடம்பெறுகிறது. சன்சத் சங்குல் என்ற வார்த்தை தேவனகிரியிலும், நாடாளுமன்ற வளாகம் என்ற வார்த்தையும் நாணயத்தில் பொறிக்கப்படுகிறது.

இந்த நாணயம் வட்ட வடிவத்தில், 44 மில்லிமீட்டர் சுற்றளவு, நாணயத்தை சுற்றி 200 பற்கள் அடங்கிய டிசைன் வழங்கப்படுகிறது. 35 கிராம் எடை கொண்டிருக்கும் புதிய நாணயம் four-part அலாய் மூலம் உருவாக்கப்படுகிறது. இதில் 50 சதவீதம் சில்வர், 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் நிக்கல் மற்றும் 5 சதவீதம் ஜின்க் இடம்பெற்று இருக்கும்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி மே 28 ஆம் தேதி திறந்து வைக்கிறார். திறப்பு விழாவில் ஆளும் கட்சிக்கு ஆதரவான 25 கட்சிகள் பங்கேற்பதாக அறிவித்து உள்ளன. மறுபுறம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறக்க எதிர்ப்பு தெரிவித்து 20 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளன.


Next Story