தட்சிண கன்னடாவில் 120 திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் கைது


தட்சிண கன்னடாவில் 120 திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் கைது
x
தினத்தந்தி 17 Oct 2022 7:00 PM GMT (Updated: 17 Oct 2022 7:00 PM GMT)

தட்சிண கன்னடாவில் 120 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய கேரளாவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மங்களூரு;


தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் புறநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் குட்டபரம்பு பகுதியை சேர்ந்த முகமது (வயது 42) என்பதும், திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர் என்பதும் தெரியவந்தது.

அவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்லாரே, சவணூா், பெல்லந்தூர் உள்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள், கோவில்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் கேரள மாநிலத்திலும் பல பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 120-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் பதிவாகி உள்ளது. இதையடுத்து போலீசார் அவர்மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story