ஆம் ஆத்மி அரசை வேலை செய்ய விடாமல் தடுக்கவே ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன - டெல்லி துணை முதல் மந்திரி


ஆம் ஆத்மி அரசை வேலை செய்ய விடாமல் தடுக்கவே ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன - டெல்லி துணை முதல் மந்திரி
x

ஆம் ஆத்மி அரசை வேலை செய்ய விடாமல் தடுக்கவே ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன என்று டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. அதில், துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா, கல்வி, ஆயத்தீர்வை உள்ளிட்ட இலாகாக்களை கவனித்து வருகிறார்.கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மதுபான ஆயத்தீர்வை கொள்கை வகுக்கப்பட்டது. அக்கொள்கை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.

மதுபான உரிமங்கள் பெற்றவர்களுக்கு திட்டமிட்டு ஆதாயங்கள் அளிக்கப்பட்டதாகவும், டெல்லி ஆயத்தீர்வை சட்டம் மற்றும் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. இந்த சட்ட விதிமீறல்கள் குறித்து டெல்லி தலைமை செயலாளர் அறிக்கை அளித்ததன்பேரில், சி.பி.ஐ. விசாரணை நடத்த கவர்னர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

இவ்வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா வீடு, ஆயத்தீர்வை முன்னாள் ஆணையர் அரவா கோபிகிருஷ்ணா மற்றும் 2 அரசு அதிகாரிகளின் வீடுகள் உள்பட 31 இடங்களில் சி.பி.ஐ. நேற்று அதிரடி சோதனை நடத்தியது. தொடர்ந்து மணிஷ் சிசோடியா உள்பட 16 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில், இன்னும் 3-4 நாட்களில், சிபிஐ என்னை கைது செய்யும் என்று துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா கூறியுள்ளார். மேலும், ஆம் ஆத்மி அரசை வேலை செய்ய விடாமல் தடுப்பதற்காகவே ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம், உங்களால் எங்களை உடைக்க முடியாது. 2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையேயானதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.


Next Story