நடுவழியில், பல அடி உயரத்தில் நின்ற கேபிள் கார்; 3 மணி நேர போராட்டத்திற்கு பின் அனைவரும் மீட்பு


நடுவழியில், பல அடி உயரத்தில் நின்ற கேபிள் கார்; 3 மணி நேர போராட்டத்திற்கு பின் அனைவரும் மீட்பு
x

இமாசல பிரதேசத்தில் பல அடி உயரத்தில் நடுவழியில் நின்ற கேபிள் காரில் இருந்த 11 சுற்றுலாவாசிகள் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டனர்.



சிம்லா,



இமாசல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று பர்வானூ. இந்நகரில் உள்ள டிம்பர் டிரெயில் பகுதியில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சுற்றுலாவாசிகள் செல்வதற்கு வசதியாக கேபிள் கார் சேவை செயல்படுகிறது.

இதில், 2 முதியவர்கள், 4 பெண்கள் உள்பட மொத்தம் 11 சுற்றுலாவாசிகள் சென்ற கேபிள் கார் திடீரென பல நூறு அடி உயரத்தில் நடுவழியில் நின்றது. இதுபற்றி பர்வானூ துணை போலீஸ் சூப்பிரெண்டு பிரணவ் சவுகான் கூறும்போது, கேபிள் காரில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறால் நடுவழியில் நின்று விட்டது.

அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. பயணிகள் அனைவரும் நலமுடன் உள்ளனர் என கூறினார். இதன்படி, கயிறு கட்டி கேபிள் காரில் இருந்து ஒவ்வொருவராக கீழே இறக்கி கொண்டு வரப்பட்டனர்.

இதில், 3 மணி நேர போராட்டத்திற்கு பின்பு சுற்றுலாவாசிகள் அனைவரும் மீட்கப்பட்டு உள்ளனர் என மாவட்ட மாஜிஸ்திரேட் கூறியுள்ளார். அனைத்து 11 பேரும் மீட்கப்பட்டு விட்டனர் என பேரிடர் மேலாண் முதன்மை செயலாளர் ஓன்கார் சந்த் சர்மாவும் உறுதிப்படுத்தி உள்ளார்.

சம்பவம் பற்றி அறிந்ததும், அந்த பகுதிக்கு செல்கிறேன் என இமாசல பிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் டுவிட்டரில் பதிவிட்டார். சுற்றுலாவாசிகள் சிக்கி கொண்ட தகவல் தெரிந்ததும், இந்திய விமான படையும் உடனடியாக மீட்பு பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டது.


Next Story