விராஜ்பேட்டையில் கஞ்சா செடிகளை வளர்த்த விவசாயி கைது


விராஜ்பேட்டையில்  கஞ்சா செடிகளை வளர்த்த விவசாயி கைது
x
தினத்தந்தி 7 Aug 2023 6:45 PM GMT (Updated: 7 Aug 2023 6:46 PM GMT)

விராஜ்பேட்டையில் கஞ்சா செடிகளை வளர்த்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

குடகு-

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா சித்தாப்புரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட குட்லூரு கிராமத்தில் வசித்து வருபவர் கிரண். விவசாயியான இவருக்கு சொந்தமாக காபித்தோட்டமும் உள்ளது. இந்த நிலையில் இவர் தனது காபித்தோட்டத்தில் காபிச்செடிகளுக்கு இடையே கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வருவதாக புகார்கள் எழுந்தன.

இதுபற்றி சித்தாப்புரா போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கிரண் தனது தோட்டத்தில் கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்தது தெரியவந்தது. அதையடுத்து போலீசார் கிரணை கைது செய்தனர்.

மேலும் அவரது காபித்தோட்டத்தில் வளர்ந்திருந்த 32 கிலோ கஞ்சா செடிகளையும் பிடுங்கி அழித்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story