இந்தியா கூட்டணியில் குழப்பமா? மம்தா, நிதிஷ் புறக்கணிப்பால் நாளைய கூட்டம் ஒத்திவைப்பு


இந்தியா கூட்டணியில் குழப்பமா? மம்தா, நிதிஷ் புறக்கணிப்பால் நாளைய கூட்டம் ஒத்திவைப்பு
x

கோப்பு படம்

தினத்தந்தி 5 Dec 2023 11:24 AM GMT (Updated: 5 Dec 2023 12:21 PM GMT)

4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்தபோதே, "இந்தியா" கூட்டணியின் கூட்டம் டிசம்பர் 6-ந் தேதி நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.

புதுடெல்லி,

தெலுங்கானா, சத்தீஸ்கார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல்கள் முடிவடைந்துவிட்டன. தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. சத்தீஸ்கார், ராஜஸ்தானில் பாஜகவிடம் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்தது. மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பாஜக தக்க வைத்துக் கொண்டது.

மிசோரமில் ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியை பிடித்துள்ளது. 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்தபோதே, "இந்தியா" கூட்டணியின் கூட்டம் டிசம்பர் 6-ந் தேதி நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்ததாக தகவல்கள் வெளியாகின. முன்னதாக 5 மாநில சட்டசபை தேர்தலுக்காக "இந்தியா" கூட்டணியின் ஒட்டு மொத்த நடவடிக்கைகளையும் காங்கிரஸ் நிறுத்தி வைத்தது. 5 மாநில தேர்தல் முடிவடைந்ததால் "இந்தியா" கூட்டணியின் கூட்டத்திற்கு மீண்டும் காங்கிரஸ் அழைப்பு விடுத்தது.

ஆனால் இந்தியா" கூட்டணியின் டிசம்பர் 6-ந் தேதி கூட்டம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு, அப்படி எனக்கு எந்த ஒரு தகவலும் வரவில்லை. டிசம்பர் 6,7 ஆகிய தேதிகளில் எனக்கு ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் உள்ளன.

எனக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தால் "இந்தியா" கூட்டணிக்கு சென்றிருப்பேன். என்னுடைய ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளை உடனடியாக மாற்றுவது சாத்தியமில்லை என மம்தா பானர்ஜி கூறினார். இதையடுத்து நிதிஷ்குமார், அகிலேஷ்யாதவ் ஆகியோரும் இந்தியா கூட்டணி கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், 6 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்தியா கூட்டணியின் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2 வாரங்கள் கழித்து அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசித்த பிறகு இந்தியா கூட்டணி கூட்டம் மீண்டும் எப்போது நடைபெறும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.


Next Story