இந்தியாவில் மேலும் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு - 2 பேர் உயிரிழப்பு


இந்தியாவில் மேலும் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு - 2 பேர் உயிரிழப்பு
x

புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,034 ஆக குறைந்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனாவின் புதிய வகையான 'ஜேஎன்.1' வகை தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த வகை கொரோனா வேகமாகப் பரவுவதோடு, நோய்த் தடுப்பாற்றலையும் ஊடுருவுமென கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக ஜே.என்.1 வகை உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ ஆரம்பித்தது.

கடந்த மாதம் டிசம்பர் 5-ம் தேதி வரை இரண்டு இலக்கங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்தது. ஆனால் குளிர்காலம் தொடங்கி உள்ளதால் ஜேஎன்.1 வைரஸ் பரவல் சற்று அதிகமாகி உள்ளது. கடந்த டிசம்பர் 31-ம் தேதி அன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 841 பேர் பாதிக்கப்பட்டனர். இது கடந்த 2021-ம் ஆண்டு மே மாதத்தில் பதிவான அளவில் 0.2 சதவீதம் ஆகும்.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 203 பேருக்கு புதிய வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. காலை 8 மணி நிலவரப்படி கர்நாடகா மற்றும் கேரளாவில் தலா ஒருவர் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

ஜேஎன்.1 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 92 சதவீதம் பேர் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று குணமாகி விடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,034 ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4.4 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.


Next Story