சீனாவில் பரவும் புதிய வைரஸ் காய்ச்சல்; இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை- மத்திய சுகாதாரத்துறை தகவல்


சீனாவில் பரவும் புதிய வைரஸ் காய்ச்சல்; இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை- மத்திய சுகாதாரத்துறை தகவல்
x

சீனாவில் பரவி வரும் மர்ம காய்ச்சலால் இந்தியாவுக்கு குறைந்த அளவிலான ஆபத்து உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

உலகையே உலுக்கிய கொரோனா எனும் பெருந்தொற்று ஏறத்தாழ முற்றிலும் மறைந்து போனது. மக்களை பெரும் இன்னலுக்கு ஆளாக்கிய இந்த கொரோனா வைரஸ் சீனாவில் இருந்துதான் முதன் முதலாக உலக நாடுகளுக்கு பரவியது. இந்த நிலையில், மீண்டும் சீனாவில் ஒரு வகை மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றின் தொடக்க நிலைகளின்போது காணப்பட்ட அதே நிலைமை மீண்டும் ஏற்பட்டு உள்ளது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவமனைகளில் சேருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பீஜிங் மற்றும் லையானிங் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. நிமோனியா வகை தொற்றால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்றும் இதனால் தீவிர சுவாச கோளாறுகள் ஏற்பட்டு, சிகிச்சை பெற வேண்டிய தேவை ஏற்படும் என்றும் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவிக்கின்றது. இதுகுறித்த விரிவான, கூடுதல் விவரங்களை சமர்ப்பிக்கும்படி சீனாவிடம் உலக சுகாதார அமைப்பு கேட்டு கொண்டது. ஆனால் இதுகுறித்து சீன அரசாங்கம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. உலக சுகாதார அமைப்பு, நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் சீனாவில் உள்ள தேசிய அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியதாவது:- சீனாவில் பரவி வரும் மர்ம காய்ச்சலால் இந்தியாவுக்கு குறைந்த அளவே அபாயம் உள்ளது. H9N2 வைரஸ் காய்ச்சல் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள சுவாச பிரச்சினை ஆகிய இரண்டையுமே உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். எத்தகைய அவசர நிலையையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story