2050-ல் உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் - கவுதம் அதானி கணிப்பு

Image Courtesy : ANI
ஒரு வல்லரசு ஒரு செழிப்பான ஜனநாயகமாகவும் இருக்க வேண்டும் என்று கவுதம் அதானி தெரிவித்தார்.
மும்பை,
மும்பையில் 21-வது உலக கணக்காளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரரும், அதானி குழுமத்தின் நிறுவனருமான கவுதம் அதானி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-
"இந்தியா டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கு 58 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. இதே போல் 12 முதல் 18 மாதங்களுக்கு ஒருமுறை கிடைக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சமமான தொகையைச் சேர்த்தால், இந்தியா 2050-ல் உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இருக்கும்.
தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடியானது ஒருமுனை அல்லது இருமுனை வல்லரசுகளின் ஆதிக்கம் என்ற கட்டுக்கதையை உடைத்துவிட்டது.
இந்த வளர்ந்து வரும் பன்முனை உலகில், வல்லரசு நாடுகள் நெருக்கடியில் மற்ற நாடுகளை அடிபணியச் செய்யாமல், மனிதநேயத்தை முதன்மையான செயல்பாட்டுக் கொள்கையாக வைத்திருக்கும் பொறுப்பை எடுத்து மற்றவர்களுக்கு உதவ வேண்டும்.
ஒரு வல்லரசு ஒரு செழிப்பான ஜனநாயகமாகவும் இருக்க வேண்டும், ஆனால் ஜனநாயகத்தில் 'ஒரே மாதிரியான பாணி' என்பது எதுவும் இல்லை."
இவ்வாறு கவுதம் அதானி தெரிவித்தார்.






