2026-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் சேவை தொடங்கும் - மத்திய ரெயில்வே மந்திரி


2026-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் சேவை தொடங்கும் - மத்திய ரெயில்வே மந்திரி
x
தினத்தந்தி 25 Feb 2024 2:54 AM GMT (Updated: 25 Feb 2024 2:59 AM GMT)

2026-ம் ஆண்டு ஜூலை - ஆகஸ்டு மாதத்துக்குள் பணிகளை முடித்து அங்கு புல்லட் ரெயில் இயக்கப்படும் என்று மத்திய ரெயில்வே மந்திரி தெரிவித்தார்.

மும்பை,

நாட்டின் முதல் புல்லட் ரெயில் திட்டப்பணிகள் மும்பை - ஆமதாபாத் இடையே நடந்து வருகின்றன. ரூ.1.08 லட்சம் கோடி செலவில் நடந்து வரும் புல்லட் ரெயில் திட்டப்பணிகளை மும்பையில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மும்பை - ஆமதாபாத் இடையே 508 கி.மீ. நீளத்தில் புல்லட் ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதில் சூரத் - பிலிமோரா இடையே 2026-ம் ஆண்டு ஜூலை - ஆகஸ்டு மாதத்துக்குள் பணிகளை முடித்து அங்கு புல்லட் ரெயில் இயக்கப்படும். பின்னர் ஒவ்வொரு பகுதிகளாக புல்லட் ரெயில் சேவை நீட்டிக்கப்படும்.

மும்பை - ஆமதாபாத் இடையே மொத்தம் 12 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் நின்று செல்லும் ரெயில், எல்லா இடங்களிலும் நின்று செல்லும் ரெயில் என இரு சேவைகள் இயக்கப்படும். குறைந்த இடங்களில் நிற்கும் புல்லட் ரெயில் 2 மணி நேரத்தில் சென்றுவிடும். எல்லா இடங்களிலும் நிற்கும் ரெயில் மும்பையில் இருந்து ஆமதாபாத் செல்ல 2.45 மணி நேரம் எடுத்து கொள்ளும்.

முந்தைய உத்தவ் தாக்கரே அரசு எல்லா அனுமதியையும் விரைவாக கொடுத்து இருந்தால் இப்போது அதிக பணிகள் முடிந்து இருக்கும். ஏக்நாத் ஷிண்டே ஆட்சிக்கு வந்த பின்னர் புல்லட் ரெயில் திட்ட பணிகள் வேகம் அடைந்தது" என்று அவர் கூறினார்.

மத்திய மந்திரி கூறியபடி குஜராத் மாநிலத்தின் சூரத் - பிலிமோரா இடையே அடுத்த 2 ஆண்டுகளில் புல்லட் ரெயில் இயக்கப்பட்டால், அது இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் சேவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story