ஆன்லைன் விளையாட்டுக்கான சுய ஒழுங்குமுறை அமைப்பு: மத்திய மந்திரி விளக்கம்


ஆன்லைன் விளையாட்டுக்கான சுய ஒழுங்குமுறை அமைப்பு: மத்திய மந்திரி விளக்கம்
x

கோப்புப்படம்

ஆன்லைன் விளையாட்டுக்கான சுய ஒழுங்குமுறை அமைப்பு தொடர்பாக மத்திய மந்திரி விளக்கம் அளித்தார்.

புதுடெல்லி,

ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான புதிய வரைவு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அவை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம், வருகிற 25-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வரைவு விதிமுறைகள் குறித்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுடன் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆன்லைன் விளையாட்டை நடத்தும் நிறுவனங்கள், சுய ஒழுங்குமுறை அமைப்பிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று வரைவு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. அதற்காக தொழில்துறை அமைப்புகள், சுய ஒழுங்குமுறை அமைப்புகளாக ஆக முடியாது.

குழந்தைகள், பெற்றோர், ஆன்லைனில் விளையாடுவோர், மத்திய அரசு, விளையாட்டு நிறுவனங்கள் ஆகிய அனைத்து தரப்பினரின் பிரதிநிதிகளும் அதில் இடம்பெற வேண்டும். தொழில்துறையின் பிடியில் இருந்து அந்த அமைப்பு விலகியே இருக்க வேண்டும்.

புதிய விதிமுறைகள், இம்மாதம் 31-ந் தேதிக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.

திறமை சார்ந்த ஆன்லைன் விளையாட்டுகளும், அதிர்ஷ்டம் சார்ந்த விளையாட்டுகளும் அனுமதிக்கப்படும். ஆனால் அதன் மீது பந்தயம் கட்டுவது அனுமதிக்கப்படாது என்று அவர் கூறினார்.


Next Story