போதைப்பொருள் வழக்கு: ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி


போதைப்பொருள் வழக்கு: ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி
x
தினத்தந்தி 1 May 2024 6:29 AM GMT (Updated: 1 May 2024 7:46 AM GMT)

ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பாக டெல்லி சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

புதுடெல்லி,

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய வழக்கில் சென்னையைச் சேர்ந்த முஜிபுர், முகேஷ் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரும் பிடிபட்டனர். இதையடுத்து சென்னையைச் சேர்ந்த ஜாபர்சாதிக், அவரது நெருங்கிய கூட்டாளி சதானந்தம் உள்ளிட்டோரையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக், சென்னையைச் சேர்ந்த முஜிபுர், முகேஷ், சதானந்தம், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 5 பேருக்கு எதிராக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் டெல்லி சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடத்தவும், வாக்குமூலம் பதிவு செய்யவும் அனுமதிக்கக் கோரி டெல்லி சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த சிறப்பு கோர்ட்டு ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் திகார் சிறைக்குச் சென்று 3 நாட்கள் வாக்குமூலத்தை பதிவு செய்ய சுனில் சங்கர் யாதவ் உள்ளிட்ட சென்னை அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. சிறைக்குள் லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களை எடுத்துச் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Next Story