அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குஷால்நகரில், ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் போராட்டம்


அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குஷால்நகரில், ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் போராட்டம்
x

குஷால்நகரில், அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

குடகு;

மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய-மாநில அரசின் நடவடிக்கையை கண்டித்தும், அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் இளைஞர் அணி தலைவர் விஸ்வா தலைமையில் குஷால்நகர் தாசில்தார் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது அவர்கள், பா.ஜனதா அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

பா.ஜனதா, அக்னிபத் என்ற திட்டத்தை கொண்டு வந்து இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பணிக்கு சேர்ந்தால் 4 ஆண்டுகள் கழித்து இளைஞர்கள் தோட்டத்தில் காவலாளிகள் அல்லது கூலி வேலைக்கு தான் செல்ல முடியும்.

ஆகையால் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். அதற்கு பதிலாக ராணுவத்தில் ஆள் சேர்ப்பில் பழைய முறையை கொண்டுவரவேண்டும். கர்நாடகத்தில் அரசு பள்ளி பாடப்புத்தகத்தில் சில முக்கிய தலைவர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்களின் வரலாற்று குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளது.

இது அவர்களை அவமதிக்கும் செயலாகும். இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றனர்.


Next Story