ஜோஷிமத் கட்டிட விரிசல்; மத்திய அரசுக்கு உடனடி உத்தரவு பிறப்பிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி


ஜோஷிமத் கட்டிட விரிசல்; மத்திய அரசுக்கு உடனடி உத்தரவு பிறப்பிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
x

ஜோஷிமத் நகரில் கட்டிட விரிசல், நிலம் மூழ்குதல் உள்ளிட்ட விவகாரத்தில் தலையிட்டு மத்திய அரசுக்கு உடனடியாக உத்தரவு பிறப்பிக்க கோரிய மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்து விட்டது.



புதுடெல்லி,


வடஇந்திய பகுதியில் அமைந்த உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் தரை பகுதியில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் ஜோஷிமத் நகரானது அமைந்து உள்ளது. இமயமலையையொட்டி அமைந்த புனித நகரம் எனப்படும் இந்நகரில் பிரசித்தி பெற்ற ஜோதிர்மத் கோவில் அமைந்துள்ளது.

இந்நகரம் நிலநடுக்க பாதிப்புக்கு அதிகளவில் இலக்காக கூடிய இடங்களை கொண்டுள்ளது. இந்த சூழலில், கடந்த 15 நாட்களாக, வரலாற்று சிறப்பு மிக்க ஜோஷிமத் நகரின் பல பகுதிகளில் உள்ள வீடுகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கட்டிடங்களின் சுவர்களில் திடீர், திடீரென விரிசல் விட தொடங்கியது.

இதுதவிர, தரை பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு, பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு மக்களை அச்சத்தில் உறைய செய்தது. தொடர்ந்து ஜோஷிமத் கோவிலிலும் பெரிய அளவில் விரிசல்கள் விட்டு உள்ளன. ஜோதிர்மடம் மற்றும் சங்கராச்சார்யா மடத்திலும் அடுத்தடுத்து விரிசல் ஏற்பட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியது.

அந்த பகுதியில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. இதேபோன்று நில பகுதி பூமிக்குள் மூழ்கிய சம்பவமும் நடந்துள்ளது.

இந்நிலையில், அவசரகால நிலையை உணர்ந்த அரசும் உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து, மக்களை மீட்டு, நகராட்சி கட்டிடங்கள், குருத்வாராக்கள் மற்றும் பள்ளி கூடங்களில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் அவர்களை கொண்டு சென்று தங்க வைத்து உள்ளனர்.

ஜோஷிமத் பகுதியில் நில பகுதிகள் மூழ்கி வருவது போன்று, கர்ணபிரயாக் நகராட்சி பகுதிகளில் பகுகுணா நகரில் சில வீடுகளில் விரிசல் ஏற்பட தொடங்கியது.

ஜோஷிமத் நகருக்கு அருகேயுள்ள கிராமங்களில் இதேபோன்ற நிலை காணப்படுகிறது என சிதார்கஞ்ச் தொகுதி எம்.எல்.ஏ. சவுரப் பகுகுணா கூறினார்.

இதனை தொடர்ந்து, ஜோஷிமத் நகரில் அதிக அளவில் விரிசல் விட்ட மலாரி இன், மவுண்ட் வியூ உள்ளிட்ட ஓட்டல்கள் மற்றும் வீடுகளை இடிப்பது என அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டது.

இதுபற்றி அரசு நிர்வாகம் தனியாக குழு அமைத்து செயல்படுத்தி வருவதுடன், இஸ்ரோ, ஐ.ஐ.டி. அமைப்புகளுடன் இணைந்து இந்த விரிசலுக்கான காரணம் பற்றி ஆய்வும் செய்து வருகிறது.

தொடர்ந்து, கட்டுமான பணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. விரிசலானது தொடர்ந்து பரவி வருகிறது. இயற்கை பேரிடரால் இதுபோன்று ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

உத்தரகாண்டின் ஜோஷிமத் பகுதியில் 28 ராணுவ கட்டிடங்களிலும் விரிசல் ஏற்பட்டு உள்ளன. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உடனடியாக தலையிட்டு, மத்திய அரசை புனரமைப்பு பணியில் ஈடுபடவும் மற்றும் ஜோஷிமத் நகர மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும் உத்தரவிட கோரி மனு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்ள சுப்ரீம் கோர்ட்டு இன்று மறுப்பு தெரிவித்து உள்ளது. இதனை இயற்கை பேரிடராக அறிவிக்க கோரி உத்தரகாண்ட் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யலாம் என மனுதாரருக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.


Next Story