குடியிருப்புகளின் முன்பகுதியில் வியாபாரம் நடத்த அனுமதி கிடையாது; கர்நாடக ஐகோர்ட்டு கருத்து


குடியிருப்புகளின் முன்பகுதியில் வியாபாரம் நடத்த அனுமதி கிடையாது; கர்நாடக ஐகோர்ட்டு கருத்து
x

நடைபாதை வியாபாரிகளால் மக்கள் அவதிப்படும் நிலையில், குடியிருப்புகளின் முன்பகுதியில் வியாபாரம் நடத்த அனுமதி கிடையாது என்று கர்நாடக ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

நடைபாதை வியாபாரிகளால் மக்கள் அவதிப்படும் நிலையில், குடியிருப்புகளின் முன்பகுதியில் வியாபாரம் நடத்த அனுமதி கிடையாது என்று கர்நாடக ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

சாலையோர வியாபாரம்

பெங்களூரு வில்சன் கார்டன் பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இந்த நிலையில் இந்த குடியிருப்புகளின் முன்பகுதிகளில் நடைபாதை வியாபாரிகள் பூ, பழம் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு தொந்தரவு ஏற்படுவதாக தெரிகிறது.

இந்த நிலையில் வில்சன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஒருவர், குடியிருப்பு பகுதிகளை ஆக்கிரமித்து சிலர் சட்டவிரோதமாக வியாபாரம் செய்வதாக கூறி கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நீதிபதி பிரசன்னா, அசோக் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'குடியிருப்புகளின் முன்பகுதிகளில் வியாபாரம் நடத்த அனுமதி கிடையாது.

விரிவான அறிக்கை

சாலைகளில் உள்ள கடைகளை மட்டுமே வியாபார மையமாக நடத்தவேண்டும். மாநகராட்சி அதிகாரிகள் அதை முறையாக கண்காணிக்காமல் உள்ளனர். எனவே வில்சன் கார்டன் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் சட்டவிரோதமாக வியாபாரம் செய்யப்படுவது குறித்து விரிவான அறிக்கையை பெங்களூரு மாநகராட்சி சமர்பிக்க வேண்டும்.

மேலும், குடியிருப்பு பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும்' என உத்தரவிட்டனர். மேலும், அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபடும் அதிகாரியின் பெயர் மற்றும் நோட்டீசு வழங்கப்படும் வியாபாரிகள் குறித்த தகவல்களும் இடம்பெற வேண்டும் என்றனர்.


Next Story