கர்நாடகா: குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரி சாலையில் உருண்டு நூதன போராட்டம்
உடுப்பியில் சாலையை சீரமைக்க கோரி நித்தியானந்தா என்ற சமூக ஆர்வலர் சாலையில் உருண்டு நூதன முறையில் போராட்டம் நடத்தியுள்ளார்.
உடுப்பி,
கர்நாடகாவில் வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக பல இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது.
கர்நாடகாவில் மழையின் தீவிரம் குறைந்ததையடுத்து சாலைகளில் தேங்கியிருந்த வெள்ளம் படிப்படியாக வடிந்தது. மழை வெள்ளத்தில் சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளன. சாலையை சீரமைக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், உடுப்பியில் சாலையை சீரமைக்க கோரி நித்தியானந்தா என்ற சமூக ஆர்வலர் ஒருவர் நூதன முறையில் போராட்டம் நடத்தியுள்ளார். காவி உடையணிந்து கொண்டு, சாலையில் தேங்காய் உடைத்து பூஜை செய்த அவர் குண்டும், குழியுமாக உள்ள சாலையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தினார்.
இது குறித்து சமூக ஆர்வலர் நித்தியானந்தா கூறும்போது, மழை வெள்ளத்திற்கு பிறகு சாலைகள் படுமோசமாக மாறிவிட்டது. அரசு அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு சாலைகளை சீரமைத்து தரவேண்டும் என்பதற்காக இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்தார்.
மக்கள் பிரச்சனைகளுக்கு இவர் நூதன முறைகளில் போராட்டம் நடத்தி பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.