கர்நாடக மேல்-சபை தேர்தல்: பா.ஜனதா வேட்பாளர் உள்பட 7 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு


கர்நாடக மேல்-சபை தேர்தல்: பா.ஜனதா வேட்பாளர் உள்பட 7 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு
x
தினத்தந்தி 25 May 2022 5:19 PM GMT (Updated: 25 May 2022 5:24 PM GMT)

கர்நாடக மேல்-சபை தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் உள்பட 7 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன. அவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வானதாக நாளை அறிவிப்பு வெளியாகிறது.

மாவட்ட செய்திகள்

பெங்களூரு:

கர்நாடக மேல்-சபை தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் உள்பட 7 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன. அவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வானதாக நாளை அறிவிப்பு வெளியாகிறது.

கர்நாடக மேல்-சபை தேர்தல்

கர்நாடக மேல்-சபையில் காலியாகும் 7 இடங்களுக்கு வருகிற 3-ந் தேதி தேர்தல்நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 17-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்த மனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. 7 இடங்களுக்கு 7 பேர் மட்டுமே மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். ஆளும் பா.ஜனதா சார்பில் லட்சுமண் சவதி, ஹேமலதா நாயக், சலவாதி நாராயணசாமி, கேசவபிரசாத் ஆகிய 4 பேரும், காங்கிரஸ் சார்பில் நாகராஜ் யாதவ், அப்துல் ஜப்பார் ஆகிய 2 பேரும், ஜனதா தளம் (எஸ்) சார்பில் டி.ஏ.ஷரவணாவும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மனுக்கள் ஏற்பு

இந்த 7 வேட்பாளா்களின் மனுக்கள் நேற்று பரிசீலனை செய்யப்பட்டன. பரிசீலனைக்கு பிறகு அந்த 7 மனுக்களும் சட்டப்படி சரியாக இருப்பதாகவும், அதனால் அந்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தேர்தல் அதிகாரியும், சட்டசபை செயலாளருமான விசாலாட்சி அறிவித்தார்.

மனுக்களை வாபஸ் பெற நாளை (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். இது எம்.எல்.ஏ.க்கள் மூலம் நடைபெறும் தேர்தல் ஆகும். எம்.எல்.ஏ.க்கள் தான் வாக்காளர்கள்.

தனி மெஜாரிட்டி

இந்த தேர்தலில் போட்டி இல்லாத காரணத்தால் 7 வேட்பாளர்களும் எம்.எல்.சி.க்களாக ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை முறைப்படி அறிவிக்கப்படுகின்றன.

அதன் பிறகு அவர்கள் மேல்-சபை உறுப்பினர்களாக தோ்ந்து எடுக்கப்பட்டதற்கான சான்றிதழையும் தேர்தல் அதிகாரி வழங்குகிறார். இதன் மூலம் கர்நாடக மேல்-சபையில் ஆளும் பா.ஜனதாவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும். அதனால் பா.ஜனதா அரசால் சட்ட மசோதாக்களை எந்த சிக்கலும் இன்றி நிறைவேற்ற முடியும்.


Next Story