கர்நாடகா: பகத்சிங் வேடத்தில் நடிக்க ஒத்திகை பார்த்தபோது கயிறு கழுத்தை இறுக்கி சிறுவன் சாவு...!


கர்நாடகா: பகத்சிங் வேடத்தில் நடிக்க ஒத்திகை பார்த்தபோது கயிறு கழுத்தை இறுக்கி சிறுவன் சாவு...!
x

பகத்சிங் நாடகத்துக்காக வீட்டில் ஒத்திகை பார்த்தபோது, கயிறு கழுத்தை இறுக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

பெங்களூரு,

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா டவுன் கவுளகோட் பேரங்கானை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி பாக்யலட்சுமி. இவருக்கு சஞ்சய் கவுடா என்ற மகன் இருந்தான். இவன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் வருகிற 1-ந்தேதி (நாளை) தனியார் பள்ளியில் நடக்கும் கன்னட ராஜ்யோத்சவா விழாவில் சஞ்சய், பகத்சிங் வேடம் அணிந்து நடிக்க இருந்தான். இதற்காக அவன் ஒத்திைகயில் ஈடுபட்டு வந்தான். நேற்றுமுன்தினம் சஞ்சய் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்தான். அப்போது பகத்சிங்கை தூக்கிலிடும் காட்சியை சஞ்சய் நடித்து கொண்டிருந்தான்.

அப்போது, முகத்தை துணியால் மூடி கழுத்தில் கயிறை கட்டி சோபாவில் இருந்து குதித்துள்ளான். அந்த சமயத்தில், அவனது கழுத்தை கயிறு இறுக்கி உள்ளது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால், சஞ்சய் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இந்த நிலையில் வெளியே சென்றிருந்த அவனது பெற்றோர், வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது, சஞ்சய் தூக்கில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பரங்கி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவனது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பரங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story