கேரளா: இங்கிலாந்து பெண்ணிடம் பலாத்கார முயற்சி; கடைசி நேரத்தில் ஹீரோவாக வந்து காப்பாற்றிய ரிசார்ட் ஊழியர்


கேரளா:  இங்கிலாந்து பெண்ணிடம் பலாத்கார முயற்சி; கடைசி நேரத்தில் ஹீரோவாக வந்து காப்பாற்றிய ரிசார்ட் ஊழியர்
x

கோப்பு படம்

கேரளாவுக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற 5 பேர் கொண்ட கும்பலிடம் இருந்து ரிசார்ட் ஊழியர் ஒருவர் பாதுகாத்து உள்ளார்.

திருவனந்தபுரம்,



கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் பகுதியருகே சவுரா-அடிமலதுரா பகுதியருகே தனியார் தங்கும் விடுதி ஒன்று உள்ளது.

இந்த விடுதியில் இங்கிலாந்து நாட்டில் இருந்து சுற்றுலா வந்த பெண் ஒருவர் தங்கியுள்ளார். அவர் நள்ளிரவில் சவுரா பீச்சுக்கு தனியாக சுற்றி பார்ப்பதற்காக நடந்தபடி சென்றுள்ளார்.

அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை அணுகி சில்மிசத்தில் ஈடுபட்டு தொந்தரவு செய்து உள்ளது. இதன்பின் தனியாக வந்த வாய்ப்பை பயன்படுத்தி, அவரை கும்பல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளது.

அந்த நேரத்தில், சுற்றுலா பயணி தங்கியிருந்த விடுதியின் சமையல் கலைஞர் ஒருவர் அந்த பகுதியில் இருந்துள்ளார். அவர் ஓடி சென்று அந்த கும்பலின் பலாத்கார முயற்சியை தடுத்து உள்ளார்.

இதனால், அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அந்த கும்பலில் ஒருவர் உள்ளூரை சேர்ந்த வாடகை வாகன ஓட்டுனர் ஆவார். பலாத்கார முயற்சி தோல்வியடைந்ததும், அந்த கும்பல் வெளிநாட்டு பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.

இவ்வளவு நடந்தும் இதுபற்றி போலீசில் அந்த பெண் புகார் எதுவும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. போலீசார் கூறும்போது, கும்பலில் ஒருவர் அந்தோணி என்பவர் வாகன ஓட்டுனர். அந்த பெண்ணின் பெற்றோர் இதற்கு முன் கேரளா வந்தபோது, அவரது வாகனத்திலேயே பயணித்து உள்ளனர்.

இந்த பெண்ணின் மொபைல் போன் எண் அந்தோணிக்கு கிடைத்து உள்ளது. அதன் வழியே, இங்கிலாந்து பெண்ணுக்கு அவர் குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளார் என தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் வாகன ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். எனினும், அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு விட்டார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story