கவர்னர் ஆர்எஸ்எஸ் கருவியாக செயல்படுகிறார், பினராயி விஜயன் கண்டனம்


கவர்னர் ஆர்எஸ்எஸ் கருவியாக செயல்படுகிறார், பினராயி விஜயன் கண்டனம்
x
தினத்தந்தி 24 Oct 2022 7:36 AM GMT (Updated: 24 Oct 2022 7:48 AM GMT)

கவர்னர் ஆர்எஸ்எஸ் கருவியாக செயல்படுகிறார், பினராயி விஜயன் கண்டனம்

திருவனந்தபுரம்

கேரளாவில் பல்கலைக்கழக வேந்தர் மகாதேவன் பிள்ளையால் நியமிக்கப்பட்ட 15 செனட் உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யுமாறு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் இறுதி எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால், கவர்னரின் இறுதி எச்சரிக்கையை துணைவேந்தர் நிராகரித்தார். இதைத் தொடர்ந்து, ராஜ்பவனே ஒரு அசாதாரண நடவடிக்கையாக 15 உறுப்பினர்களை செனட்டில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்தது மற்றும் இதற்கான உத்தரவு அரசிதழும் வெளியிடப்பட்டது. உத்தரவின் நகல்கள் துணைவேந்தர் மற்றும் செனட் உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

துணைவேந்தரைத் தேர்ந்தெடுப்பதற்கான குழுவுக்கு செனட் கூட்டத்தை நடத்தவும், செனட்டின் பரிந்துரையாளரை வழங்கவும் கவர்னர் பலமுறை உத்தரவிட்டும் கவனிக்கப்படாமல் போனதால், கவர்னர் இந்த அசாதாரண நடவடிக்கையை எடுத்துள்ளதாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவித்தன. கேரள பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தரின் பதவிக்காலம் அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.

முன்னதாக, பல்கலைக்கழக துணைவேந்தர் பி.வி.மகாதேவன் பிள்ளை, செனட் உறுப்பினர்களை நீக்கியதில் சில விதிமீறல்கள் இருப்பதாகவும், செனட் உறுப்பினர்களை நீக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும் பல்கலைக்கழக வேந்தரான கவர்னரிடம் தெரிவித்தார்.

கவர்னர் ஆரிப் முகமது கான், பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற வகையில், கேரள பல்கலைக்கழகத்தின் செனட்டில் இருந்து 15 உறுப்பினர்களை நீக்கினார். வேந்தரால் பரிந்துரைக்கப்பட்ட 15 உறுப்பினர்கள் செனட் உறுப்பினர்களாக நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்று கேரள பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கவர்னர் கடிதம் எழுதினார். 15 பேரில், ஐந்து பேர் சிண்டிகேட் உறுப்பினர்கள் ஆவார்கள்.

தற்போது கேரளாவில் உள்ள ஒன்பது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை இன்று காலை 11.30 மணிக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கவர்னர் ஆரிப் கான் உத்தரவிட்டு உள்ளார்.

இதற்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

பாலக்காட்டில் செய்தியாளர்களை சந்தித்த பினராய் விஜயன் கூறியதாவது:-

கவர்னர் (ஆரிப் எம் கான்) தனக்கு உள்ள அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்துகிறார். இது ஜனநாயக விரோதம் துணைவேந்தர்களின் அதிகாரத்தின் மீதான அத்துமீறல். கவர்னர் பதவி என்பது அரசுக்கு எதிராகச் செல்வதற்காக அல்ல, அவர் ஆர்எஸ்எஸ் கருவியாக செயல்படுகிறார்.

துணை வேந்தர்கள் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் பதவியை தவறாக பயன்படுத்துதல் அல்லது தவறாக செயல்படுதல் போன்ற குற்றங்கள் காணபட வேண்டும். அப்படி ஒன்றும் இல்லாமல் பணிநீக்கம் அல்லது ராஜினாமா செய்ய முடியாது. இது நிர்வாக துறை, நீதி துறை தான் முடிவு எடுக்க வேண்டும். இது கூட தெரியாமல் கவர்னர் செயல்பட்டு வருகிறார்.

கவர்னர் செயல்பாடு ஜனநாயக முறையை மீறும் செயலக உள்ளது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசும், சுதந்திரமாக செயல்பட வேண்டிய பல்கலைக்கழகங்களும் உள்ள அதிகாரத்தில் நுழையும் இந்த செயலை ஏற்று கொள்ள முடியாது.

கவர்னரின் இது போன்ற செயல்பாட்டை உடனே நிறுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட் விதியை மீறி கவர்னர் செயல்படுகிறார். ஒரு நோட்டீஸ் கூட கொடுக்காமல், அவர்கள் நிலையை கேட்கமால் யாரையும் பதவியை விட்டு விலக செய்ய முடியாது என கூறினார்.


Next Story