கருப்பு கொடி காட்டியதால் கோபம்.. காரைவிட்டு இறங்கி சென்று எதிர்ப்பு தெரிவித்த கவர்னர்: கேரளாவில் பரபரப்பு


கருப்பு கொடி காட்டியதால் கோபம்.. காரைவிட்டு இறங்கி சென்று எதிர்ப்பு தெரிவித்த கவர்னர்: கேரளாவில் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Jan 2024 7:07 AM GMT (Updated: 27 Jan 2024 7:31 AM GMT)

கொல்லத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற கேரள கவர்னருக்கு, எஸ்.ஐ.எப். அமைப்பினர் கருப்புக்கொடி காட்டினர்.

திருவனந்தபுரம்,

கேரள கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும், கேரள மாநில அரசுக்கும் இடையே நீண்ட நாட்களாக பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நிலவி வருகிறது. அண்மையில், கேரள சட்டமன்ற கூட்டத்தொடரின்போது மாநில அரசின் கொள்கைகள் அடங்கிய உரையின் கடைசி பத்தியை மட்டும் வாசித்துவிட்டு, சட்டசபையில் இருந்து கவர்னர் ஆரிப் முகமது கான் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள நிலம்மல் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கவர்னர் ஆரிப் முகமது கான் சென்றிருந்தார். அப்போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான எஸ்.ஐ.எப். அமைப்பினர் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து தனது காரில் இருந்து வெளியே வந்த ஆரிப் முகமது கான், சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். எஸ்.ஐ.எப். அமைப்பினரின் கருப்புக்கொடி போராட்டத்தை காவல்துறையினர் தடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story