கேரள கவர்னர் விவகாரம்: முதல்-மந்திரி மீது மத்திய இணை மந்திரி மறைமுக தாக்குதல்


கேரள கவர்னர் விவகாரம்:  முதல்-மந்திரி மீது மத்திய இணை மந்திரி மறைமுக தாக்குதல்
x

கேரள முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து குற்ற பதிவுகள் கொண்ட நபர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என மத்திய இணை மந்திரி முரளீதரன் கூறியுள்ளார்.


திருவனந்தபுரம்,


கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தன் மீது நடந்த தனிப்பட்ட தாக்குதல் பற்றி முதல்-மந்திரிக்கு எதிராக கூறிய விசயங்கள் பரபரப்பு ஏற்படுத்தின. தொடர்ந்து அதற்கான ஆவணங்களை ஊடகங்களிடம் இன்று வெளியிடுவேன் என்றும் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

கேரளாவில் பல்கலை கழகங்களின் நடவடிக்கைகளில் தலையிடமாட்டேன் என முதல்-மந்திரி உறுதியளித்து விட்டு, அதன் கட்டுப்பாட்டை கையில் எடுத்து கொள்ள அவர்கள் முயற்சித்து வருகின்றனர் என கவர்னர் ஆரிப் முகமது கான் குற்றச்சாட்டாக கூறினார்.

இதேபோன்று, தகுதியல்லாத நபர்களை, தனக்கு வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் பதவியில் நியமித்து வருவதற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

கேரளாவில் கண்ணூர் பல்கலை கழகத்தில் மலையாளம் துறை இணை பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த 6 பேரில் ஒருவரான பிரியா வர்கீஸ், முதல்-மந்திரி பினராயி விஜயனின் தனி செயலாளரான கே.கே. ராகேஷ் என்பவரின் மனைவியாவார்.

இந்த பதவிக்கான தேர்வில் கலந்து கொண்ட 6 பேரில் பிரியா வர்கீசின் மதிப்பெண்கள் மிக மோசம் என்ற அளவில் இருந்துள்ளன. எனினும், துணை வேந்தர் தலைமையிலான கமிட்டி நடத்திய நேர்காணலுக்கு பின்னர், தர வரிசை பட்டியலில் அவர் முன்னிலை பெற்றார்.

இவை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது. இந்த பதவிக்கான வேட்பாளர்களில் ஒருவரான ஜோசப் ஸ்கேரியா, 651 மதிப்பெண்களுடன் இறுதி தரவரிசை பட்டியலில் 2-வது இடம் பிடித்துள்ளார். ஆனால், பிரியா வர்கீஸ் 156 மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளார். எனினும், தரவரிசையில் முன்னிலையில் இருந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, மாநில பல்கலை கழகங்களுக்கான வேந்தரான கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், கடந்த ஆகஸ்டில் பிரியாவின் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்து விட்டார். குடும்ப உறவுமுறைகளுக்கு பதவி வழங்கும் அதிகார முறைகேடு நடைபெறுகிறது, என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிராக பல்கலை கழகத்தின் சிண்டிகேட் சார்பில் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரணைக்கு எடுத்து கொண்ட ஐகோர்ட்டு, பிரியா வர்கீசின் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது கவனத்திற்குரியது.

இந்நிலையில், கேரள கவர்னர் நேற்று கூறும்போது, மந்திரிகளின் தனி உதவியாளர்கள் ஆயுள் முழுவதற்கும் பென்சன் பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இது ஒரு வகையில் கொள்ளை அடித்தல் ஆகும்.

அரரசாங்கத்தின் கஜானா பணம் கொள்ளை போகும்போது அதனை பார்த்து கொண்டு அமைதியாக எப்படி இருப்பது? என கேட்டுள்ள கேரள கவர்னர் அனைத்து ஆவண சான்றுகளும் நாளை (இன்று) ஊடகங்களுக்கு காட்டப்படும் என கூறினார்.

இதேபோன்று, 3 ஆண்டுகளுக்கு முன்பு தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், கேரள போலீசார் வழக்கு கூட பதிவு செய்யாமல் உள்ளனர் என்ற குற்றச்சாட்டையும் கூறியுள்ள கவர்னர் ஆரிப், இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும் தொடர்பு உள்ளது என்றும் உள்துறை மந்திரி பதவியையும் வகித்து வரும் அவரது தனிப்பட்ட உத்தரவின் பேரிலேயே போலீசார் அதுபற்றிய வழக்கு பதிவு செய்யாமல் உள்ளனர் என்றும் ஊடகங்களிடம் குற்றச்சாட்டாக கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், அதற்கான ஆவணங்கள் ஊடகங்களிடம் இன்று வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் மத்திய இணை மந்திரியான வி. முரளீதரன் கேரள பல்கலை கழகங்களில் நடைபெறும் நியமன முறைகேடுகள் பற்றி இன்று கூறும்போது, பல்கலை கழகங்கள் தன்னாட்சியுடன் செயல்பட வேண்டும். ஆனால், கேரள அரசு அதனை அழித்து விட்டு, பல்கலை கழகங்களை தங்களது கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகிறது.

கேரள கவர்னர் காட்டியுள்ள வீடியோ பதிவின்படி, குற்றச்சாட்டுக்கு ஆளான நபர், கேரள முதல்-மந்திரியின் அரசியல் செயலாளராக உள்ளார் என அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது. இதுபோன்ற குற்ற பதிவுகளை கொண்ட நபர்களுக்கு அடைக்கலம் தரும் ஒன்றாக முதல்-மந்திரியின் அலுவலகம் இருக்க கூடாது. அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என கூறியுள்ளார்.


Next Story