2 மடங்கு இருப்பு இருந்தும் மத்திய அரசு அரிசி கொடுக்காதது ஏன்?; எடியூரப்பாவுக்கு, மந்திரி கே.எச்.முனியப்பா கேள்வி


2 மடங்கு இருப்பு இருந்தும் மத்திய அரசு அரிசி கொடுக்காதது ஏன்?; எடியூரப்பாவுக்கு, மந்திரி கே.எச்.முனியப்பா கேள்வி
x

ஏழைகளுக்கு அரிசி கொடுத்திருந்தால் நற்பெயர் கிடைத்திருக்கும் என்றும், 2 மடங்கு இருப்பு இருந்தும் மத்திய அரசு அரிசி கொடுக்காதது ஏன்? என்றும் எடியூரப்பாவுக்கு, மந்திரி கே.எச்.முனியப்பா கேள்வி எழுப்பி உள்ளார்.

பெங்களூரு:

ஏழைகளுக்கு அரிசி கொடுத்திருந்தால் நற்பெயர் கிடைத்திருக்கும் என்றும், 2 மடங்கு இருப்பு இருந்தும் மத்திய அரசு அரிசி கொடுக்காதது ஏன்? என்றும் எடியூரப்பாவுக்கு, மந்திரி கே.எச்.முனியப்பா கேள்வி எழுப்பி உள்ளார்.

பெங்களூருவில் நேற்று உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி கே.எச்.முனியப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பா.ஜனதாவை மக்கள் வீட்டுக்கு...

காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் தர்ணாவில் ஈடுபட போவதாகவும், காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார். எடியூரப்பா ஒரு மூத்த தலைவர். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக தான், அவர்களை மக்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

காங்கிரஸ் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையால், எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுத்திருக்கிறார்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற காங்கிரஸ் அரசு தயாராக இருக்கிறது. ஒரு சில திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஆகலாம். காங்கிரஸ் கொண்டு வந்துள்ள திட்டங்கள் மக்களுக்கானது.

நற்பெயர் கிடைத்திருக்கும்

அன்னபாக்ய திட்டத்தின் கீழ் 10 கிலோ அரிசி வழங்க மத்திய அரசிடம் அரிசி கொடுக்கும்படி கேட்டோம். அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு அரிசி கொடுக்க மறுத்து விட்டது. மத்திய அரசிடம் 2 மடங்கிற்கும் கூடுதலாக அரிசி இருகிறது. அந்த அரிசியை கொடுக்க மத்திய அரசு மறுப்பது ஏன்?. இதுபற்றி எடியூரப்பா தான் தெரிவிக்க வேண்டும்.

கர்நாடகத்திற்கு தேவையான அரிசியை கொடுத்திருந்தால் மத்திய அரசுக்கு தான் மக்கள் மத்தியில் நற்பெயர் கிடைத்திருக்கும். அரிசி கொடுக்கும் விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்வது பற்றி பா.ஜனதாவினர் பேசுவதில்லை. நாங்கள் கூறியபடி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story