கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டு சிறை - லட்சத்தீவு எம்.பி முகமது பைசல் தகுதி நீக்கம்


கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டு சிறை - லட்சத்தீவு எம்.பி முகமது பைசல் தகுதி நீக்கம்
x

கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள லட்சத்தீவு எம்.பி முகமது பைசல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கவரட்டி,

லட்சத்தீவு எம்.பி.யாக இருப்பவர் முகமது பைசல். கடந்த 2009-ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது, முகமது பைசலும், வேறு சிலரும் ஒரு அரசியல் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி பி.எம்.சயீத்தின் மருமகன் பாடாநாத் சாலிக்கை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து எம்.பி. முகமது பைசல் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கவரட்டி மாவட்ட மற்றும் செஷன்ஸ் கோர்ட்டு, எம்.பி. முகமது பைசல் உள்ளிட்ட 4 பேருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து கூறிய எம்.பி. முகமது பைசல், இவ்வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்கோர்ட்டில் விரைவில் முறையீடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள லட்சத்தீவு எம்.பி. முகமது பைசல், எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 8 உடன் படிக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் 102 (எல்) (இ) விதிகளின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது.


Next Story