நில மோசடி வழக்கு: தேஜஸ்வி யாதவுக்கு இன்று மீண்டும் சம்மன் அனுப்பிய சிபிஐ..!


நில மோசடி வழக்கு: தேஜஸ்வி யாதவுக்கு இன்று மீண்டும் சம்மன் அனுப்பிய சிபிஐ..!
x

நில மோசடி வழக்கில் தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ இன்று மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், கடந்த, 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலானகாலகட்டத்தில், ரெயில்வே மந்திரியாக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது, பீகாரை சேர்ந்த சிலருக்கு, ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவின் மனைவி ரப்ரி தேவி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த வழக்கில், லாலு பிரசாத், அவரது மகன் மற்றும் துணை முதல்-மந்திரியான தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் 3 மகள்களுடன் தொடர்புடைய நாடு முழுவதும் உள்ள 24 இடங்களில் அமலாக்க துறை சோதனை நடத்தி உள்ளது.

இந்த சூழலில் நிலமோசடி வழக்கில் தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ நான்காவது முறையாக இன்று (வியாழக்கிழமை) சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக, பிப்ரவரி 24-ம், மார்ச் 4, 11 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. மனைவியின் உடல்நிலையைக் காரணம் காட்டி மூன்று சம்மன்களைத் தவிர்த்த நிலையில், தற்போது 4-வது முறையாக மார்ச் 25-ம் தேதியன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக தேஜஸ்வி யாதவின் டெல்லி வீட்டிலும் அமலாக்கத்துறை கடந்த வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியது. இந்த சோதனையில், ரூ. 53 லட்சம் ரொக்கம், 540 கிராம் தங்கம், 1.5 கிலோ தங்க நகைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.


Next Story