பொதுசிவில் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க விதிக்கப்பட்ட கால அவகாசம் நீட்டிப்பு - மத்திய சட்ட ஆணையம்


பொதுசிவில் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க விதிக்கப்பட்ட கால அவகாசம் நீட்டிப்பு - மத்திய சட்ட ஆணையம்
x

பொதுசிவில் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க இன்றே கடைசி நாளாக இருந்த நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லி,

இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் சிவில் சட்டங்கள் உள்ளன. திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு தனி நபர் உரிமைகள் தொடர்பாக அந்தந்த நபர்களின் மதத்திற்கு ஏற்ப சிவில் சட்டங்கள் உள்ளன. தனி நபர் தான் பின்பற்றும் மதத்திற்கு ஏற்றார்போல் சிவில் சட்டங்கள் உள்ளன.

இதனிடையே, நாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என பல்வேறு தரப்பு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.

மத்தியில் ஆளும் பாஜக 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது தேர்தல் அறிக்கையில் நாட்டில் பொதுசிவில் சட்டம் கொண்டுவரப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் பாட்னாவில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி நாட்டில் பொதுசிவில் சட்டம் கொண்டுவருவது குறித்து பேசினார். வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பொதுச்சிவில் சட்டம் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில் பொதுசிவில் சட்டம் குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள், அரசியல் கட்சிகள் கருத்து கூறலாம் என இந்திய சட்ட ஆணையம் கடந்த மாதம் 14-ம் தேதி பொது நோட்டீஸ் வெளியிட்டது. கருத்து தெரிவிக்க ஒரு மாதம் (ஜூலை 14- இன்று) கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து பலரும் பொதுசிவில் சட்டம் குறித்து மத்திய சட்ட ஆணையத்திற்கு ஆன்லைன், கடிதம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தங்கள் கருத்தை தெரிவித்து வந்தனர். இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பொது சிவில் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க இன்றே கடைசி நாளாக இருந்த நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொதுசிவில் சட்டம் குறித்து வரும் 28ம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.


Next Story