மராட்டிய மந்திரிகள் பெலகாவி வந்தால் சட்டப்படி நடவடிக்கை; மந்திரி அசோக் பேட்டி


மராட்டிய மந்திரிகள் பெலகாவி வந்தால் சட்டப்படி நடவடிக்கை; மந்திரி அசோக் பேட்டி
x
தினத்தந்தி 5 Dec 2022 6:45 PM GMT (Updated: 5 Dec 2022 6:47 PM GMT)

மராட்டிய மந்திரிகள் பெலகாவிக்கு வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எல்லை விவகாரத்தில் அரசு அடி பணியாது என்றும் மந்திரி அசோக் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூருவில் நேற்று வருவாய்த்துறை மந்திரி அசோக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

அரசு அடிபணியாது

கர்நாடகம்-மராட்டியம் இடையே பெலகாவி எல்லை பிரச்சினை 34 ஆண்டுகளாக இருந்து வருகிறது. எல்லை பிரச்சினையை கையில் எடுத்து சிவசேனா கட்சி அரசியல் நாடகமாடுகிறது. சிவசேனா ஒரு நாடக கம்பெனி. அரசியல் காரணங்களுக்கும், தேர்தல் காரணங்களுக்காகவும் எல்லை பிரச்சினையை கையில் எடுத்து பேசி வருகின்றனர். இது மராட்டிய மக்களுக்கும் தெரியும்.

இந்த விவகாரத்தில் ஒரு அங்குல இடத்தை கூட மராட்டியத்திற்கு விட்டு கொடுக்க மாட்டோம் என்று கர்நாடக அரசு தொடர்ந்து கூறிவருகிறது. ஆனால் மீண்டும், மீண்டும் எல்லை பிரச்சினையை மராட்டியம் கையில் எடுக்கிறது. இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு அடிபணியாது. மராட்டியம் சவால் விடுத்தால், கர்நாடகமும் சவால் விடுக்கும். நமது உரிமையை விட்டு கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை.

சட்டப்படி நடவடிக்கை

எல்லை விவகாரத்தில் மகாஜன் அறிக்கையே இறுதியானது. மகாஜன் அறிக்கையை கர்நாடக அரசு ஏற்றுள்ளது. மராட்டியம் தான் ஏற்றுக் கொள்ளாமல் சுப்ரீம் கோாட்டுக்கு சென்றுள்ளது. சுப்ரீம் கோர்ட்டிலும் கர்நாடகத்திற்கு சாதகமான தீர்ப்பு தான் வரும். எல்லை பிரச்சினை குறித்து பேசுவதற்காக மராட்டிய மந்திரிகள் பெலகாவி வருவதாக அறிவித்துள்ளனர். அவர்கள் பெலகாவிக்கு வர வேண்டாம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

மராட்டிய மந்திரிகள் பெலகாவிக்கு வந்தால், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும். சட்டம்-ஒழுங்கு பாதிக்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி பெலகாவி மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே மராட்டிய மந்திரிகள் பெலகாவிக்கு வந்தால் சட்டப்படி நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுப்பார்கள். ஏனெனில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

இவ்வாறு மந்திரி அசோக் கூறினார்.


Next Story