சிறுத்தை தாக்குதல் எதிரொலி: திருப்பதியில் மலையேறும் பக்தர்களுக்கு கைத்தடி - தேவஸ்தானம் நடவடிக்கை


சிறுத்தை தாக்குதல் எதிரொலி: திருப்பதியில் மலையேறும் பக்தர்களுக்கு கைத்தடி - தேவஸ்தானம் நடவடிக்கை
x

சிறுத்தை தாக்குதல் எதிரொலியாக திருப்பதியில் மலையேறும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கப்படுகிறது.

திருமலை,

திருப்பதி அலிப்பிரி மலைப்பாதையில் பெற்றோருடன் சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை கொன்றது. இதையடுத்து ஒரு சிறுத்தை கூண்டில் சிக்கியது. ஆனால் சில மணி நேரத்தில் மீண்டும் வேறு ஒரு சிறுத்தை அதே இடத்திற்கு வந்தது. இதனை கண்டு அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

அப்போது சிலர் சிறுத்தையை மறைந்திருந்து புகைப்படமும் எடுத்துள்ளனர்.மேலும் போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார், வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசு வெடித்து சிறுத்தையை விரட்டியடித்தனர். தொடர்ந்து சிறுத்தை வராமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பதி மலைப்பாதையில் கடந்த 3 நாட்களாக சுற்றிவந்த சிறுத்தை, தற்போது கீழே இறங்கி மலையடிவாரத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்திற்குள் வந்ததால் பொதுமக்கள், பக்தர்கள் பீதியில் உள்ளனர். பக்தர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திருப்பதி அலிபிரி வழியாக மலையேறும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது. தேவஸ்தான பாதுகாவலர்கள் பக்தர்களுக்கு கைத்தடிகளை வழங்கினர். இந்த கைத்தடிகள் ஏழுமலையான் கோவில் அருகே மீண்டும் சேகரிக்கப்படுகின்றன. 12 வயதுக்குட்பட்டோருக்கு காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே நடைபயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நடைபாதையில் இரவு நேரங்களில் அதிக அளவில் வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் பொருத்தப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story