மதுபான கொள்கை முறைகேடு வழக்கு - சி.பி.ஐ. முன்பு இன்று கெஜ்ரிவால் ஆஜராகிறார்


மதுபான கொள்கை முறைகேடு வழக்கு - சி.பி.ஐ. முன்பு இன்று கெஜ்ரிவால் ஆஜராகிறார்
x

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு விசாரணைக்காக சி.பி.ஐ. முன்பு டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இன்று ஆஜராகிறார்.

புதுடெல்லி,

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் மதுபான கொள்கை ஊழல் நடந்திருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுபான கொள்கையில் வியாபாரிகளுக்கு சாதகமான அம்சங்களையும், சலுகைகளையும் சேர்த்து, பிரதிபலனாக ரூ.100 கோடி அளவுக்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு லஞ்சம் கைமாறி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதில் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் டெல்லி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து இன்று காலை 11 மணியளவில் சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்காக கெஜ்ரிவால் நேரில் ஆஜராக உள்ளார்.

ஏற்கனவே கோவா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலின் போது, ஆம் ஆத்மி கட்சியினர் பொதுச்சொத்துகளின் மீது, போஸ்டர் ஒட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு 27-ந்தேதி ஆஜராகுமாறு கோவா காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story