மராட்டியத்தில் அடுத்த ஒரு ஆண்டில் 75 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் - பட்னாவிஸ்


மராட்டியத்தில் அடுத்த ஒரு ஆண்டில் 75 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் - பட்னாவிஸ்
x

அடுத்த ஒரு ஆண்டில் 75 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வாய்ப்பு வழங்கப்படும் என மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

75 ஆயிரம் அரசு பணி

மராட்டிய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் மாநிலத்தில் காலியாக உள்ள அரசு பணிகளுக்கான 75 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு எடுத்தது. இதுதொடர்பாக துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று நாக்பூர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

அடுத்த 1½ ஆண்டில் 10 லட்சம் பேரை வேலைக்கு எடுக்குமாறு பிரதமர் மோடி கூறியிருந்தார். இதுதொடர்பாக அவர் நேற்று 75 ஆயிரம் பணிநியமன ஆணைகளை வழங்கினார். இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

போலீஸ் துறையில் 18 ஆயிரம் பணி

பிரதமர் மோடியுடன் சேர்ந்து மராட்டிய அரசும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையின் கீழ் 75 ஆயிரம் வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு வழங்க முடிவு செய்து உள்ளது. போலீஸ் துறையில் மட்டும் 18 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

அதற்கான அறிவிப்பு அடுத்த 5 அல்லது 7 நாளில் வெளியிடப்படும். அடுத்த ஒரு ஆண்டில் மாநிலத்தில் இளைஞர்களுக்கு 75 ஆயிரம் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story