கொல்கத்தாவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமானத்தின் கழிவறையில் 'பீடி' புகைத்தவர் கைது


கொல்கத்தாவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமானத்தின் கழிவறையில் பீடி புகைத்தவர் கைது
x
தினத்தந்தி 5 Sep 2023 6:45 PM GMT (Updated: 5 Sep 2023 6:45 PM GMT)

கொல்கத்தாவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமானத்தின் கழிவறையில் பீடி புகைத்தவரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:

பெங்களூரு தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு நோக்கி விமானம் ஒன்று வந்தது. அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அந்த விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் வந்த பயணி ஒருவர் கழிவறைக்கு சென்றார். பின்னர் அவர் அங்கு வைத்து பீடி புகைத்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த விமான பணிப்பெண்கள் உடனடியாக கழிவறையில் இருந்தவரை வெளியே வர கூறினர். மேலும் அவர்கள் இதுகுறித்து பெங்களூரு விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மேலும் புகைப்பிடித்தவரை எச்சரித்து இருக்கையில் அமரவைத்தனர்.

இதற்கிடையே அந்த விமானம் பெங்களூருவில் தரையிறங்கியது. அப்போது அங்கு காத்திருந்த விமான நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தினர். அப்போது அவரது பெயர் கருணாகரன் என்பதும், அவர் தான் விமானத்தின் கழிவறையில் புகைப்பிடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கருணாகரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story