பூரி ஜெகநாதர் ரத யாத்திரை: கூட்டத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஒருவர் உயிரிழப்பு


பூரி ஜெகநாதர் ரத யாத்திரை: கூட்டத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஒருவர் உயிரிழப்பு
x

பூரி ஜெகநாதர் ரத யாத்திரையில் பங்குபெற்ற பக்தர் ஒருவர் கூட்டத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

பூரி,

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ரத யாத்திரை மிக பிரமாண்டமாக நடைபெறும். ஜெகநாதரின் 12 யாத்திரைகளில் ரத யாத்திரை மிகவும் புனிதமானது மற்றும் மிகவும் பிரபலமானது. மூலவர்களான பாலபத்திரர் (பலராமர்) அவரின் சகோதரர் ஜெகநாதர் (கிருஷ்ணர்), சகோதரி சுபத்ரா ஆகியோர் தனித்தனி தேர்களில் எழுந்தருளி, பூரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை நேற்று கோலாகலமாக நடைபெற்றது. நேற்று மாலை 5.20 மணியளவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸ், ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் ஜெகநாதர் தேரின் வடம் பிடித்து இழுத்து ரத யாத்திரையை முறைப்படி தொடங்கி வைத்தனர். எதிர்க்கட்சி தலைவர் நவீன் பட்நாயக்கும் தரிசனம் செய்தார்.

அதன்பின் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுக்கத் தொடங்கினர். முதலில் பாலபத்திரர் தேர் இழுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுபத்ரா தேர், அதன்பின் ஜெகநாதர் தேர் இழுக்கப்பட்டது. வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களும் பூரி நகரின் வீதிகளில் அசைந்தாடி செல்லும் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் இந்த ரத யாத்திரையில் பங்குபெற்ற பக்தர் ஒருவர் கூட்டத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். மேலும் பலர் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் பக்தர்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்காக அவர்கள் மீது தண்ணீர் தெளிக்கப்பட்ட போதிலும், பலர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அங்கு இருந்த ஆம்புலன்சுகள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

1 More update

Next Story