ஹாங்காங் விமான நிலையத்தில் லாரியில் இருந்து தவறி விழுந்த நபர்; விமானம் மோதி மரணம்


ஹாங்காங் விமான நிலையத்தில் லாரியில் இருந்து தவறி விழுந்த நபர்; விமானம் மோதி மரணம்
x
தினத்தந்தி 6 Feb 2024 11:58 AM GMT (Updated: 6 Feb 2024 12:39 PM GMT)

அந்த பணியாளர் வேலையில் இருந்தபோது, அவர் அணிந்திருந்த சீட் பெல்ட் கழன்றிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

ஹாங்காங்,

ஹாங்காங் விமான நிலையத்தில் பணியாற்றிய ஊழியர் விமானம் மோதி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது. ஜோர்டான் நாட்டை சேர்ந்த 34 வயது நபரான அவர், லாரி ஒன்றில் இன்று பயணித்து உள்ளார். பயணிகள் அமரும் பகுதியில் இருந்திருக்கிறார்.

அப்போது, அவர் லாரியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அவர் மீது விமானம் ஒன்று மோதி, அவரை இழுத்து சென்றுள்ளது. இதன்பின்பு, அவர் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் டாக்சிக்கள் செல்லும் வழியில் கிடந்துள்ளார்.

இதனை பார்த்த அவசரகால பணியாளர்கள் உடனடியாக அவரை மீட்டனர். எனினும், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டார் என அறிவிக்கப்பட்டார். சீனா விமான சேவைக்கான நிறுவனத்தில் பராமரிப்பு மற்றும் அடிமட்ட பணியாளராக அவர் பணியாற்றி வந்துள்ளார் என ஹாங்காங் விமான நிலைய கழகம் தெரிவித்து உள்ளது.

அந்த பணியாளர் வேலையில் இருந்தபோது, அவர் அணிந்திருந்த சீட் பெல்ட் கழன்றிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. ஆபத்துக்குரிய வகையில் வாகனம் ஓட்டியிருக்க கூடும் என்ற சந்தேகத்தின்பேரில், அந்த லாரியின் 60 வயது ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.


Next Story