மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு


மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு
x

மணிப்பூர் மாநிலத்தில் 19 காவல்நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகள் பதற்றமானவையாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இம்பால்,

மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில போலீசாருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், பிஜம் ஹேம்ஜித் (20) என்ற மாணவரும், ஹிஜம் லின்தோயிங்காம்பி (17) என்ற மாணவியும் கடந்த ஜூலை 6-ஆம் தேதி காணாமல் போயினா். இருவரின் செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன. அவா்கள் கடைசியாக சுராசந்த்பூா் மாவட்டத்தின் லாம்டன் பகுதியில் இருந்தது கண்டறியப்பட்டது. அங்கிருந்து எங்கு சென்றனா்? என்பது தெரியாமல் இருந்த நிலையில், இருவரும் கடத்திக் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. ஆயுதமேந்திய கும்பலிடம் அவா்கள் பிணைக்கைதிகளாக இருக்கும் படமும், பின்னா் சடலங்களாக கிடக்கும் படமும் சமூக ஊடகங்களில் வெளியானது. இதனால், மாநிலத்தில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதனிடையே, 'மாணவன்-மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகளை அடையாளம் காண மத்திய விசாரணை அமைப்புகளுடன் இணைந்து மாநில காவல்துறையினரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா். தேடுதல் வேட்டையும் நடத்தப்பட்டு வருகிறது.

இக்கொடூர குற்றத்தில் தொடா்புடைய அனைவரின் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். அவா்களுக்கு கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர, மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். அதிகாரிகளின் விசாரணைக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்த வேண்டாம்' என்று மாநில முதல்-மந்திரி பிரேன் சிங்கின் செயலகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மணிப்பூரில் மாணவன், மாணவி கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கிழக்கு இம்பாலில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் முதல்-மந்திரி அலுவலகம் நோக்கி செல்ல முயன்றபோது அவா்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரா்களை காவல்துறையினா் கலைத்தனா். இந்த நடவடிக்கையில் 45 போ் காயமடைந்தனா். மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் நேற்று இரவு முதல் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநிலத்தில் வரும் வெள்ளிக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் மாணவன், மாணவி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு இன்றும் மாணவ-மாணவிகள் இம்பாலில் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தி போராட்டக்காரா்களை கலைத்தனா். இந்த நடவடிக்கையில் 25 முதல் 30 போ் காயமடைந்தனா் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவ-மாணவிகள் போராட்டத்தைத் தொடர்ந்து மொபைல் இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மணிப்பூரில் 19 காவல்நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகள் பதற்றமானவை என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி முதல் 6 மாதங்களுக்கு அறிவிப்பு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது. மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக வன்முறை கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


Next Story