மணிப்பூர் கலவரம்; சுப்ரீம் கோர்ட்டில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம்


மணிப்பூர் கலவரம்; சுப்ரீம் கோர்ட்டில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம்
x

மணிப்பூரில் நேற்றும், இன்றும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இரு நாட்களிலும் வன்முறை எதுவும் இல்லை என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

புதுடெல்லி,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்தெய் என்ற மெஜாரிட்டி சமூகத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களை பழங்குடியினத்தில் சேர்க்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கு மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், பழங்குடி சமூகம் அல்லாதோரான இவர்களுக்கும், பழங்குடி பிரிவினருக்கும் இடையே கடந்த 3-ந்தேதி மோதல் உருவானது. இரு தரப்பினர் நடத்திய ஊர்வலம், வன்முறையாக மாறி கலவரம் வெடித்தது.

கலவரம் பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வாகனங்கள், வீடுகள், பள்ளி கூடங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியும், தீ வைத்து கொளுத்தியும் உள்ளனர்.

வன்முறை மற்றும் பதற்ற சூழலால், இதுவரை அப்பாவி மக்கள் 54 பேர் உயிரிழந்து உள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் குவிக்கப்பட்டனர். வன்முறை பல மாவட்டங்களுக்கு பரவியதும், அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. இணையதள சேவையை முடக்கியும், ஊரடங்கை அமல்படுத்தியும் உள்ளது.

பொதுமக்கள் அமைதி காக்குமாறு முதல்-மந்திரி பிரேன் சிங் கேட்டு கொண்டார். சட்டம் மற்றும் ஒழுங்கை மீட்டெடுக்கவும், கூடுதல் பாதுகாப்பிற்காகவும் இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் படை பிரிவுகளும் வரவழைக்கப்பட்டு உள்ளன.

நிலைமை அத்துமீறி சென்ற நிலையில், வன்முறை பரவாமல் தடுக்கும் நோக்கில், 5 நாட்களுக்கு மணிப்பூரில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும், வன்முறையை கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவையும் அரசு அமல்படுத்தியது. கலவரக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிரடி விரைவு படையினரும், ராணுவம் மற்றும் துணை ராணுவம் படையினரும் கூடுதல் பாதுகாப்பிற்காக மணிப்பூரின் பல பகுதிகளிலும் குவிக்கப்பட்டு உள்ளனர். ஆயுதமேந்திய வீரர்களின் உதவியுடன், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ரோந்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மணிப்பூர் வன்முறையில் இந்திய ராணுவம் மற்றும் அசாம் ஆயுத படை உதவியுடன் இதுவரை 23 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு உள்ளனர். மணிப்பூரில் நீட் தேர்வை தள்ளி வைத்து, தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

மணிப்பூர் வன்முறையை தொடர்ந்து, பொதுமக்களை கலவர பகுதியில் இருந்து மீட்கும் பணியின் ஒரு பகுதியாக, இந்திய ராணுவம் மற்றும் அசாம் ஆயுத படை உதவியுடன் இதுவரை 23 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் ராணுவ தளங்களில் தங்க வைக்கப்பட்டனர். இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில், வான்வழி கண்காணிப்பு, ஆளில்லா விமானங்கள் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் உள்ளிட்டவற்றை கொண்டு கடந்த 24 மணிநேரத்தில் இந்திய ராணுவம் கண்காணிப்பு பணிகளையும் மேற்கொண்டது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசின் வழக்கறிஞரான துஷார் மேத்தா, மத்திய அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசு சார்பில் இன்று ஆஜரானார். அவர் கூறும்போது, மத்திய ஆயுத போலீஸ் படை, துணை ராணுவம் மற்றும் ராணுவம் என 35 படைகள் வன்முறை பாதித்த மணிப்பூரில் குவிக்கப்பட்டன.

மணிப்பூரில் நேற்றும், இன்றும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த இரு நாட்களிலும் மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. இயல்பு நிலை திரும்பி வருகிறது என கூறினார்.

தொடர்ந்து அவர், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. மக்களை குடியமர்த்த நிவாரண முகாம்கள் அமைத்து, உணவு வழங்கப்பட்டது என்று அவர் கூறினார். இடஒதுக்கீடு விவகாரம் பற்றி பின்னர் விசாரணை நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டில் அவர் வலியுறுத்தி உள்ளார்.

மணிப்பூரில் மறுகுடியமர்த்தப்பட்ட நபர்களை பற்றிய விவரங்களை அரசிடம் சுப்ரீம் கோர்ட்டு கேட்டு உள்ளது. மதஸ்தலங்களை பாதுகாக்க நடவடிக்கைகளை எடுக்கும்படியும் கேட்டு கொண்டது. நிலைமை சீரடைந்து, ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும் என்று கோர்ட்டு விரும்புகிறது என்று இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.


Next Story