பிரபல பாடகர் படுகொலை; ஆம் ஆத்மி அரசை கலைக்க காங்கிரஸ் வலியுறுத்தல்


பிரபல பாடகர் படுகொலை; ஆம் ஆத்மி அரசை கலைக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
x

பஞ்சாப்பில் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலையை அடுத்து ஆம் ஆத்மி அரசை கலைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

சண்டிகர்,

பஞ்சாப்பின் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா (வயது 27). இவர் ஜீப்பில் ஜவகர் கே கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்து உள்ளார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்து விட்டார் என மருத்துவர் தெரிவித்து உள்ளார்.

அவரது மறைவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்து உள்ளார். இதேபோன்று பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜீவாலா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, மூஸ்வாலாவுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பினை திரும்ப பெற்ற 2 நாட்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது.

காங்கிரசில் வளர்ந்து வந்த நல்ல நபரை இழந்து விட்டோம். ஆம் ஆத்மி அரசு தனக்கான நம்பிக்கையை இழந்து விட்டது. பஞ்சாப்பில் அந்த அரசை கலைக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பாடகர் மூஸ்வாலா படுகொலை கட்சிக்கும் மற்றும் நாடு முழுமைக்கும் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம். அதிக துயரம் நிறைந்த இந்த தருணத்தில் நாம் ஒற்றுமையுடனும், மனவுறுதியுடனும் நிற்போம் என தெரிவித்து உள்ளது.

சமீபத்தில் நடந்த பஞ்சாப் சட்டசபை தொகுதிக்கான தேர்தலில் மன்சா தொகுதியில் போட்டியிட்டு ஆம் ஆத்மி கட்சியின் விஜய் சிங்லாவிடம் மூஸ்வாலா தோல்வி கண்டார்.


Next Story