'மிக்ஜம்' புயல்: தரைக்காற்று எங்கே? எவ்வளவு வேகத்தில் வீசக்கூடும்?


மிக்ஜம் புயல்: தரைக்காற்று எங்கே? எவ்வளவு வேகத்தில் வீசக்கூடும்?
x
தினத்தந்தி 1 Dec 2023 11:00 PM GMT (Updated: 2 Dec 2023 12:50 AM GMT)

கரையை கடக்கும் நேரத்தில் சுமார் 80 முதல் 100 கி.மீ. வரை காற்று வீச வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை,

வங்கக்கடலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 'மிக்ஜம்' புயல் வலுவடைகிறது என்றும், இது நெல்லூர்-மசூலிப்பட்டினத்துக்கும் இடையே 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை கரையை கடக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களை நெருங்கி வந்து, 5-ந்தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.

புயல் நெருங்கும் போதும், கரையை கடக்கும் போதும் எவ்வளவு வேகத்தில், எந்த இடங்களில் காற்று வீசும்? என்பது குறித்த விளக்கத்தை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

நாளை கடலூர், விழுப்புரம் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 கி.மீ. முதல் 70 கி.மீ. வரையிலான வேகத்திம் வீசக்கூடும்.

நாளை மறுதினம் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 கி.மீ. முதல் 80 கி.மீ. வரையிலான வேகத்திலும், கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் தரைக்காற்று மணிக்கு 50 கி.மீ. முதல் 70 கி.மீ. வரையிலான வேகத்திலும் வீசும்.

கரையை கடக்கும் நேரத்தில் சுமார் 80 முதல் 100 கி.மீ. வரை காற்று வீச வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story