ஆன்லைன் விளையாட்டு விளம்பரத்தில் நடித்ததை கண்டித்து சச்சின் வீட்டின் முன்பு எம்.எல்.ஏ. திடீர் ஆர்ப்பாட்டம்


ஆன்லைன் விளையாட்டு விளம்பரத்தில் நடித்ததை கண்டித்து சச்சின் வீட்டின் முன்பு எம்.எல்.ஏ. திடீர் ஆர்ப்பாட்டம்
x

Image Courtesy : @RealBacchuKadu twitter

பாரத் ரத்னா விருதை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி சச்சின் டெண்டுல்கர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மும்பை,

மும்பை பாந்திரா பகுதியில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் வீடு உள்ளது. நேற்று அவரின் வீட்டின் முன் மராட்டிய கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் பிரகார் ஜன்சக்தி கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான பச்சு கடு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆதரவாளர்களுடன் தரையில் அமர்ந்து போராட்டம் செய்தார்.

சச்சின் தெண்டுல்கர் ஆன்லைன் விளையாட்டு விளம்பரத்தில் நடித்ததை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டம் குறித்து பச்சு கடு எம்.எல்.ஏ. கூறியதாவது:-

"இளைஞர்களை சீரழிக்கும் ஆன்லைன் விளையாட்டு விளம்பரத்தில் சச்சின் தெண்டுல்கர் நடித்துள்ளார். பாரத ரத்னா விருதை அவர் பெறாமல் இருந்து இருந்தால், நாங்கள் அவரை குறி வைத்திருக்க மாட்டோம். இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிப்பதன் மூலம் ரூ.300 கோடி சம்பாதிக்க விரும்பினால், அவர் உடனடியாக பாரத ரத்னா விருதை திரும்ப ஒப்படைக்க வேண்டும்."

இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து பச்சு கடு எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.




Next Story