பணமோசடி வழக்கு: டெல்லி ஐகோர்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சத்யேந்திர ஜெயின் மேல்முறையீடு


பணமோசடி வழக்கு: டெல்லி ஐகோர்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சத்யேந்திர ஜெயின் மேல்முறையீடு
x

பணமோசடி வழக்கில் ஜாமீன் மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க கோரிய டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சத்யேந்திர ஜெயின் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியிம் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் சத்யேந்திர ஜெயின்.

கடந்த 2017-ம் ஆண்டு சத்யேந்திர ஜெயின் மற்றும் அவரின் குடும்பத்தினர் ரூ.1.62 கோடி வரை பணமோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதன் அடிப்படையில் பணமோசடி குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணையைத் தொடங்கியது. ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சத்யேந்திர ஜெயினை கடந்த மே மாதம் அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.

இதனையடுத்து பணமோசடி வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி மந்திரி சத்யேந்திர ஜெயின் டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி விகாஸ் துல் முன் கடந்த மாதம் 17-ந் தேதி விசாரணைக்கு வந்தது. டெல்லி மந்திரி சத்யேந்திர ஜெயின் மற்றும் இருவரின் ஜாமீன் கோரும் மனுக்கள் மீதான உத்தரவை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் சத்யேந்திர ஜெயின் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த 1-ந் தேதி விசாரணைக்கு வந்த போது, பணமோசடி வழக்கில் சத்யேந்திர ஜெயினின் ஜாமீன் மனுவுக்கு அமலாக்கத்துறை 3 வாரத்திற்குள் பதிலளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில், டெல்லி ஐகோர்டின் உத்தரவை எதிர்த்து சத்யேந்திர ஜெயின் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

பணமோசடி வழக்கில் தனது ஜாமீன் மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க கோரிய டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சத்யேந்திர ஜெயின் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி எம்.ஆர்.ஷா மற்றும் நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை விசாரிக்க உள்ளது.


Next Story