பணமோசடி வழக்கு: சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்


பணமோசடி வழக்கு: சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்
x

பணமோசடி வழக்கில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் ஜூலை 27- ந் தேதி நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

மும்பை,

மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடிசை சீரமைப்பு பணி மேற்கொண்ட குரு ஆஷிஸ் என்ற கட்டுமான நிறுவனம், குடிசைப்பகுதி மக்களுக்கு வீடுகள் கட்ட வேண்டிய ரூ.1,034 கோடி நிலத்தை விற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கடந்த பிப்ரவரி மாதம் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத்துக்கு நெருக்கமானவரான தொழில் அதிபர் பிரவின் ராவத்தை கைது செய்தது. மேலும் சஞ்சய் ராவத் குடும்பத்தினரின் சுமார் ரூ.11 கோடி சொத்துகளை முடக்கியது.

இந்த வழக்கில் கடந்த 10-ந்தேதி அமலாக்கத்துறை சஞ்சய் ராவத்தை நேரில் அழைத்து சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தியது. பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

இதனையடுத்து சஞ்சய் ராவத்துக்கு நேற்று அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. அதில் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் சஞ்சய் ராவத் இன்று நேரில் ஆஜராகவில்லை. அவரது வக்கீல் நேரில் ஆஜராகி, சஞ்சய் ராவத் தரப்பில் எழுத்துப்பூர்வமான பதிலை அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் வழங்கினார்.

அதில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதால் தன்னால் நேரில் ஆஜராக முடியவில்லை என அவர் கூறியிருந்ததுடன், ஆகஸ்ட் முதல் வாரத்திற்கு பிறகு நேரில் ஆஜராக நேரம் கோரியிருந்தார்.

இந்தநிலையில் சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை இன்று மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. அதன் படி, வருகிற ஜூலை 27- ந் தேதி நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.


Next Story