நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்; மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ்


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்; மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ்
x
தினத்தந்தி 25 July 2023 5:04 AM GMT (Updated: 25 July 2023 5:23 AM GMT)

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. வருகிற ஆகஸ்டு 11-ந்தேதி வரை கூட்டத்தொடர் 21 அமர்வுகளாக நடைபெறும். கடந்த 3 நாட்களாக நடந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் சம்பவம் பற்றி விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், இன்று 4-வது நாள் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் தினமும் நாடாளுமன்றம் முடங்கி வரும் சூழலில், பா.ஜ.க. நாடாளுமன்ற கட்சி கூட்டமும் இன்று நடைபெற்றது.

இதில், நாடாளுமன்றம் சுமுகமுடன் நடைபெறுவதற்கான விசயங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில், இரு அவைகளிலும் தொடர்ந்து அமளி ஏற்பட முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ள மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி, மாநிலங்களவை எம்.பி.க்களான கேசவ ராவ், சுரேஷ் ரெட்டி, ஜோகினிபள்ளி சந்தோஷ் குமார், படுகுலா லிங்கையா யாதவ், ரஞ்சித் ரஞ்சன், மனோஜ் ஜா, சையது நசீர் உசைன், திருச்சி சிவா, இம்ரான் பிரதாப்காதி ஆகியோர் 267-வது விதியின் கீழ் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

இதேபோன்று, மக்களவையில் எம்.பி.க்கள் மணீஷ் திவாரி மற்றும் கவுரவ் கோகாய் உள்ளிட்டோர் மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என கோரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டிசை வழங்கியுள்ளனர்.


Next Story