காதல் ஜோடி ஆணவ கொலை


காதல் ஜோடி ஆணவ கொலை
x

பாகல்கோட்டை அருகே, காதல் ஜோடியை கொன்று உடலை ஆற்றில் வீசிய சம்பவம் நடந்து உள்ளது. இதுதொடர்பாக பெண்ணின் தந்தை உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பாகல்கோட்டை:

பாகல்கோட்டை அருகே, காதல் ஜோடியை கொன்று உடலை ஆற்றில் வீசிய சம்பவம் நடந்து உள்ளது. இதுதொடர்பாக பெண்ணின் தந்தை உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

காதலை கைவிட மறுப்பு

பாகல்கோட்டை அருகே பீவினமட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாத் (வயது 25). இந்த நிலையில் விஸ்வநாத்தும், பீவினமட்டி கிராமத்தில் வசித்து வந்த ராஜேஸ்வரி (23) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் ராஜேஸ்வரியின் பெற்றோருக்கு தெரியவந்தது. ஆனால் விஸ்வநாத் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் ராஜேஸ்வரியின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஸ்வநாத்தை, ராஜேஸ்வரியின் உறவினர்கள் தாக்கி இருந்தனர். இதனால் விஸ்வநாத்துக்கு அவரது குடும்பத்தினர் புத்திமதி கூறி கேரளாவுக்கு வேலைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் விஸ்வநாத்தும், ராஜேஸ்வரியும் செல்போனில் தொடர்ந்து பேசி வந்து உள்ளனர். இதுபற்றி அறிந்ததும் ராஜேஸ்வரியின் தந்தை பரசப்பா, காதலை கைவிடும்படி ராஜேஸ்வரியிடம் கூறியுள்ளார். ஆனால் இதனை ஏற்க ராஜேஸ்வரி மறுத்து விட்டார்.

ஆணவ கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த பரசப்பா, ராஜேஸ்வரியையும், விஸ்வநாத்தையும் கொலை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு விஸ்வநாத்திடம் பேசிய பரசப்பா உனக்கும், ராஜேஸ்வரிக்கும் திருமணம் செய்து வைக்கிறேன். உடனடியாக புறப்பட்டு ஊருக்கு வரும்படி கூறியுள்ளார். இதையடுத்து விஸ்வநாத் கேரளாவில் இருந்து பீவினமட்டிக்கு வந்து கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் கதக் மாவட்டம் நரகுந்து பகுதியில் வைத்து பஸ்சை வழிமறித்த பரசப்பா மற்றும் அவரது உறவினர்கள் சிலர் விஸ்வநாத்தை பஸ்சில் இருந்து இறக்கி சரக்கு ஆட்டோவில் கடத்தி சென்றனர். அப்போது ஆட்டோவில் வைத்தே விஸ்வநாத்தின் கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளனர். இதுபோல ராஜேஸ்வரியின் கழுத்தை நெரித்தும் அவரது குடும்பத்தினர் கொலை செய்து இருந்தனர்.

உடல்கள் ஆற்றில் வீச்சு

பின்னர் 2 பேரின் உடல்களையும் சாக்கு மூட்டையில் கட்டி விஜயாப்புரா மாவட்டம் அலமட்டிக்கு ஆட்டோவில் வைத்து எடுத்து சென்று உடல்களை கிருஷ்ணா ஆற்றில் வீசியுள்ளனர். இதுபற்றி பாகல்கோட்டை புறநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்து இருந்தது. அந்த தகவலின்பேரில் பரசப்பா, அவரது உறவினர்களான ரவி, அனுமந்தப்பா, வீரப்பா ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது விஸ்வநாத், ராஜேஸ்வரியை காதல் விவகாரத்தில் ஆணவ கொலை செய்து உடல்களை ஆற்றில் வீசியதை ஒப்புக்கொண்டனர். இதனால் பரசப்பா உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 6 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். ஆற்றில் வீசப்பட்ட உடல்களை மீட்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர். காதல் விவகாரத்தில் காதல் ஜோடியை கொன்று உடல்கள் ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் பாகல்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story