எனது கணவர் நாளை கோர்ட்டில் ஆதாரங்களோடு உண்மையை வெளியிடுவார் - அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி பரபரப்பு பேட்டி


எனது கணவர் நாளை கோர்ட்டில் ஆதாரங்களோடு உண்மையை வெளியிடுவார் - அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 27 March 2024 12:26 PM GMT (Updated: 27 March 2024 12:30 PM GMT)

அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் நாளையுடன் நிறைவடைய உள்ளது.

புதுடெல்லி,

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த 21ம் தேதி இரவு கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை மறுநாள் டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, கெஜ்ரிவாலை 6 நாட்கள் (28ம் தேதி வரை) அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து, கெஜ்ரிவால் அமலாக்கத்துறை காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து நாளையுடன் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் நிறைவு அடைவதால் அவரை நாளை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறை ஆஜர்படுத்த உள்ளது.

இந்நிலையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் நாளை தனது கணவர் கோர்ட்டில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா தெரிவித்துள்ளார். முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவாலை சுனிதா நேற்று மாலை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் சுனிதா கெஜ்ரிவால் கூறுகையில், "இரண்டு நாட்களுக்கு முன்பு, அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் தண்ணீர் மற்றும் கழிவுநீர் பிரச்சினை தொடர்பாக நீர்வளத்துறை மந்திரி அதிஷிக்கு கடிதம் அனுப்பி இருந்தார். மத்திய அரசு அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளது. அவர்கள் டெல்லியை அழிக்க நினைக்கிறார்களா? மக்கள் தொடர்ந்து துன்பத்தில் தவிக்க வேண்டும் என்று விரும்புகிறார்களா என்ன?. இந்த வழக்கால் அரவிந்த் கெஜ்ரிவால் மிகவும் வேதனை அடைந்துள்ளார்.

மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை சுமார் 250-க்கும் அதிமான சோதனைகளை நடத்தியுள்ளது. ஊழல் எனச் சொல்லி அவர்கள் பணத்தை தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை எதையும் கண்டுபிடிக்கவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 28-ம் தேதி (நாளை) கோர்ட்டில் அனைத்தையும் வெளிப்படுத்துவேன் என்று தெரிவித்தார்." இவ்வாறு அவர் கூறினார்.


Next Story