சமஸ்கிருதம் மற்றும் தாய்மொழி கல்விக்கு தேசிய கல்வி கொள்கை வழிவகுக்கிறது - பிரதமர் மோடி


சமஸ்கிருதம் மற்றும் தாய்மொழி கல்விக்கு தேசிய கல்வி கொள்கை வழிவகுக்கிறது - பிரதமர் மோடி
x

குறுகிய சிந்தனையிலிருந்து கல்வியை உடைத்து நவீன சிந்தனைகளுடன் இணைப்பதே தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படைக் கருத்து.

வாரணாசி,

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான அகில இந்திய கல்வி மாநாட்டை உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.

மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் அகில இந்திய கல்வி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, தேசிய கல்விக் கொள்கையானது குறுகிய வரம்புகளுக்கு வெளியே கல்வியை கொண்டு வருவதையும், 21 ஆம் நூற்றாண்டின் நவீன யோசனைகளுடன் ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார். அவர் பேசியதாவது:-

"குறுகிய சிந்தனையிலிருந்து கல்வியை உடைத்து அதை 21 ஆம் நூற்றாண்டின் நவீன சிந்தனைகளுடன் இணைப்பதே தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படைக் கருத்து. ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட கல்வி முறை இந்தியக் கொள்கைகளின் ஒரு பகுதியாக இருந்ததில்லை.

தேசிய கல்விக் கொள்கை தற்போது தாய்மொழியில் படிக்க வழி வகுத்துள்ளது. இந்த வரிசையில், சமஸ்கிருதம் போன்ற பண்டைய இந்திய மொழிகளும் ஊக்குவிக்கப்படுகின்றன. "தேசியக் கல்விக் கொள்கை" இதுவரை இல்லாத பல சாத்தியக்கூறுகளை உணர்ந்து கொள்வதற்கான ஒரு கருவியை நமக்கு அளித்துள்ளது. நாம் அதை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

நமது இளைஞர்கள் திறமையானவர்களாகவும், நம்பிக்கையுடனும், நடைமுறைச் செயல்திறனுடனும் இருக்க வேண்டும். கல்விக் கொள்கை இதற்கான அடித்தளத்தை அமைக்கிறது. பெண்களுக்கு தடையாக இருந்த துறைகள் தற்போது தங்கள் திறமையை அவர்கள் அவற்றில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

தேசியக் கல்விக் கொள்கை பல சாத்தியக்கூறுகளை உணர வழிவகை செய்துள்ளது. இளைஞர்களை பட்டப்படிப்புகளுக்குத் தயார்படுத்துவது மட்டுமன்றி, எந்த மனித வளத்தை நாடு முன்னோக்கிச் செல்லத் தேவையோ அதற்கேற்ப நமது கல்விமுறையையும் கொடுக்க வேண்டும். நமது ஆசிரியர்களும், கல்வி நிறுவனங்களும் இந்தத் தீர்மானத்திற்குத் தலைமை ஏற்க வேண்டும்.

புதிய இந்தியாவை உருவாக்க, புதிய அமைப்புகள் மற்றும் நவீன செயல்முறைகள் மிகவும் முக்கியம். கடந்த காலத்தில் கற்பனை கூட செய்யாதது இப்போது நிஜமாகி வருகிறது.புதிய கொள்கையானது குழந்தைகளின் திறமைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப அவர்களை திறமையானவர்களாக மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது." என்று அவர் கூறினார்.


Next Story