சந்தேஷ்காளி விவகாரம்: தேசிய மனித உரிமை ஆணையக் குழு நேரில் ஆய்வு


சந்தேஷ்காளி விவகாரம்: தேசிய மனித உரிமை ஆணையக் குழு நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 23 Feb 2024 7:23 AM GMT (Updated: 23 Feb 2024 8:10 AM GMT)

தானாக முன்வந்து சந்தேஷ்காளி விவகாரத்தை விசாரிப்பதாக தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளி கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷாஜகான், சொத்துகளை அபகரித்ததாகவும், மிரட்டி பணம் பறித்ததாகவும், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறி பெண்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரேசன் ஊழல் வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, கடந்த மாதம் 5-ந்தேதி ஷேக் ஷாஜகான் வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய சென்றபோது ஷேக் ஷாஜகானின் ஆதரவாளர்கள், அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். ஷேக் ஷாஜகான் தலைமறைவானார். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதன்பிறகே ஷேக் ஷாஜகானுக்கு எதிராக பெண்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி அவரை கைது செய்ய வலியுறுத்தி வருகின்றனர். இதனால் ஷேக் ஷாஜகான் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 6 இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சந்தேஷ்காளியில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நேரில் விசாரணை நடத்தி உண்மைகளை அறிய தேசிய மனித உரிமை ஆணையக் குழு இன்று மேற்கு வங்காளம் வந்துள்ளது. இக்குழுவினர் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து சம்பவ இடத்திலேயே விசாரணை நடத்தி உண்மைகளை கண்டறிய திட்டமிட்டுள்ளனர்.

சந்தேஷ்காளி விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அப்பாவி மற்றும் ஏழ்மையான பெண்கள் துன்புறுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை தனாக முன்வந்து விசாரிப்பதாக தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.


Next Story