அஜித் பவார் உள்பட 9 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய தேசியவாத காங்கிரஸ் மனு


அஜித் பவார் உள்பட 9 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய தேசியவாத காங்கிரஸ் மனு
x

அஜித் பவார் உள்பட 9 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக மராட்டிய சட்டசபை சபாநாயகரிடம், தேசியவாத காங்கிரஸ் கட்சி தகுதி நீக்க மனுவை வழங்கி உள்ளது.

புனே,

மராட்டியத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உடனான மோதலால் கட்சியை உடைத்து, தேசியவாத காங்கிரசில் இருந்து அஜித்பவார் உள்ளிட்டோர் விலகினர். பின்பு ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தனர்.

இந்தநிலையில், சிவசேனா - பா.ஜ.க. கூட்டணி அரசில் அமைச்சராக பதவியேற்று கொண்டார் அஜித்பவார். அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 8 பேருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்து உள்ளார்.

ஏற்கனவே தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக உள்ள நிலையில் அஜித் பவாரும் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார். எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயந்த் பாட்டீல் கூறும்போது, மராட்டிய சட்டசபை சபாநாயகரிடம், தகுதி நீக்க மனு ஒன்றை நாங்கள் வழங்கி உள்ளோம்.

அதற்கான நகல்களை விரைவில் அனுப்புவோம். இந்த தகுதி நீக்க மனு அஜித் பவார் உள்பட 9 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

கட்சியை விட்டு செல்கிறோம் என அவர்கள் எந்தவொரு நபரிடமும் தகவல் தெரிவிக்கவில்லை. இது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிரானது. இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் நாங்கள் கடிதம் ஒன்று எழுதி இருக்கிறோம்.

அவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்புவார்கள் என நம்புகிறோம். அவர்களை நாங்கள் ஏற்று கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story