புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்பதாக நவீன் பட்நாயக் கட்சி அறிவிப்பு


புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்பதாக நவீன் பட்நாயக் கட்சி அறிவிப்பு
x

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளதாக நவீன் பட்நாயக்கின் கட்சி அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணி முடிவடைந்து, புதிய நாடாளுமன்றம் தயாராகி விட்டது. வருகிற 28-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ஆனால், மக்கள் பணத்தில் கட்டப்பட்டது என்பதாலும், நாட்டின் முதல் குடிமகள் என்பதாலும் ஜனாதிபதி திரவுபதி முர்முதான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின.

மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி போன்றவர்கள் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டனர். 28-ந் தேதி, சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரின் பிறந்தநாள் என்பதும் எதிர்க்கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. எனவே, திறப்பு விழாவை கூட்டாக புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.

இதையடுத்து முதல்நபர்களாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. டெரிக் ஓ பிரைனும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜாவும், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை தங்கள் கட்சிகள் புறக்கணிப்பதாக வெளிப்படையாக அறிவித்தனர். இதையடுத்து புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை திமுகவும் புறக்கணிப்பதாக திமுக தரப்பில் அக்கட்சியின் எம்.பி திருச்சி சிவா அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து விசிக சார்பிலும் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவினை புறக்கணிக்க உள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை 19 எதிர்கட்சிகள் புறக்கணிக்க உள்ளதாக கூட்டாக அறிக்கை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதில் காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் விழாவை புறக்கணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் பங்கேற்க உள்ளது. இதன்மூலம் எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புத் திட்டத்தை பிஜு ஜனதா தளம் நிராகரித்துள்ளது. அத்துடன், ஜனாதிபதி பதவி மற்றும் நாடாளுமன்றம் இரண்டும் புனிதமானவை என்றும், பிரச்சனைகள் பின்னர் விவாதிக்கலாம் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதன்மூலம் பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளில் நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்பதை உறுதி செய்த முதல் கட்சி பிஜு ஜனதா தளம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளது.


Next Story