மம்தா, சரத்பவார் கட்சிகள் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தன..!! - தேர்தல் கமிஷன் அறிவிப்பு


மம்தா, சரத்பவார் கட்சிகள் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தன..!! - தேர்தல் கமிஷன் அறிவிப்பு
x

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆகிய கட்சிகள் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்துள்ளன.

புதுடெல்லி,

ஆம் ஆத்மியை தேசிய கட்சியாக தேர்தல் கமிஷன் அங்கீகரித்து உள்ளது. அதேநேரம் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆகிய கட்சிகள் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்து உள்ளன.

ஆம் ஆத்மி கட்சி

அரவிந்த் கெஜிரிவால் தலைமையில் கடந்த 2012-ம் ஆண்டு நிறுவப்பட்ட கட்சி, ஆம் ஆத்மி. முதலில் டெல்லியில் ஆட்சியை பிடித்த இந்த கட்சி, படிப்படியாக பஞ்சாப் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் கால் பதிக்க தொடங்கியது.

இதில் அடுத்த மைல்கல்லாக, கடந்த ஆண்டு நடந்த பஞ்சாப் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. மேலும் கோவா, குஜராத் தேர்தல்களிலும் கணிசமான வாக்குகளையும், இடங்களையும் ஆம் ஆத்மி பெற்றது. இதைத்தொடர்ந்து ஆம் ஆத்மியை தேசிய கட்சியாக அங்கீகரிக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு அந்த கட்சி கடிதம் எழுதியது. இதை பரிசீலித்த தேர்தல் கமிஷன், ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சி அந்தஸ்தை வழங்கி உள்ளது.

டெல்லி, கோவா, பஞ்சாப் மற்றும் குஜராத் தேர்தல்களில் ஆம் ஆத்மியின் செயல்பாடுகளின் அடிப்படையில் அந்த கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளதாக தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்டுதகுதி இழப்பு

அதேநேரம் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் இந்திய கம்னிஸ்டு கட்சிகள் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்துள்ளதாகவும் தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.

இதன் மூலம் பா.ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ், தேசிய மக்களின் கட்சி மற்றும் ஆம் ஆத்மி ஆகிய 6 கட்சிகள் மட்டுமே தற்போது தேசிய கட்சிகளாக உள்ளன.

குறைந்தபட்சம் 4 மாநிலங்களில் 6 சதவீத வாக்குகள் மற்றும் குறைந்தபட்சம் 4 மக்களவை உறுப்பினர்களை பெற்ற ஒரு கட்சி தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி பா.ம.க.

இந்த நிலையில் ராஷ்டிரீய லோக்தளம் (உத்தரபிரதேசம்), பாரதிய ராஷ்டிர சமிதி (ஆந்திரா), பி.டி.ஏ. (மணிப்பூர்), பா.ம.க. (புதுச்சேரி), புரட்சிகர சோசலிச கட்சி (மேற்கு வங்காளம்), எம்.பி.சி. (மிசோரம்) ஆகிய கட்சிகள் மாநில கட்சி அந்தஸ்தை இழந்து உள்ளன.

அதேநேரம் நாகாலாந்தில் திரிணாமுல் காங்கிரசும், மேகாலயாவில் தேசியவாத காங்கிரசும் மாநில கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. இதைப்போல லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சி நாகாலாந்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாகவும் தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.


Next Story