புதிய நாடாளுமன்றம் அனைத்து இந்தியர்களுக்கும் பெருமிதம் அளிக்கும் - பிரதமர் மோடி


புதிய நாடாளுமன்றம் அனைத்து இந்தியர்களுக்கும் பெருமிதம் அளிக்கும் - பிரதமர் மோடி
x

புதிய நாடாளுமன்றம் அனைத்து இந்தியர்களுக்கும் பெருமிதம் அளிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின் 2ஆம் கட்ட நிகழ்ச்சிகள் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தொடங்கியது. அப்போது பிரதமர் மோடியை கரகோஷம் எழுப்பி முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர். அதன் பின்னர் நாடாளுமன்றம், செங்கோல் குறித்த திரைப்படங்கள் விழாவில் திரையிடப்பட்டன. மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், சபாநாயகர் ஓம் பிர்லா உரையாற்றினார்.

அதனை தொடர்ந்து சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து ரூ.75 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை நினைவுகூரும் தபால் தலையையும் பிரதமர் வெளியிட்டார். அதன் பின்னர் திறப்பு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

புதிய நாடாளுமன்றம் திறப்பு வரலாற்று சிறப்புமிக்கது. நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சிப் பயணத்திலும் அழியாத சில தருணங்கள் வருகின்றன. மே 28 அத்தகைய நாள். புதிய நாடாளுமன்றம் தன்னிறைவு பெற்ற இந்தியாவின் எழுச்சிக்கு சாட்சியாக இருக்கும். புதிய நாடாளுமன்றம் வெறும் கட்டிடம் அல்ல, 140 கோடி இந்திய மக்களின் லட்சியத்தின் சின்னம். இது இந்தியாவின் உறுதியைப் பற்றிய செய்தியை உலகிற்கு வழங்குகிறது.

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் சர்வ மத பிரார்த்தனை நடைபெற்றது. புதிய நாடாளுமன்றம் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது. புதிய பாதைகளில் பயணம் செய்தே புதிய குறிக்கோள்களை அடைய முடியும். புதிய பாதையில் புதிய பயணத்தை நம் நாடு தொடங்கியுள்ளது. உலகமே இந்தியாவை உற்று நோக்குகிறது. இந்தியா முன்னேறிலாம் உலகம் முன்னேறும். புதிய நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் ஆலயமாக விளங்கும். இந்தியாவை உலக நாடுகள் இன்று நன்மதிப்போடு பார்க்கின்றன.

செங்கோல் புனிதமானது, முக்கியம்த்துவம் வாய்ந்தது. அதிகார மாற்றத்துக்கான அடையாளமாக செங்கோல் திகழ்கிறது. தமிழ்நாட்டு ஆதீனங்களின் ஆசியிடன் நாடாளுமன்ற வளாகத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. செங்கோல் என்பது கடமையின் பாதையில் செல்லவேண்டும் என்பதற்கான அடையாளம். ராஜாஜி மற்றும் ஆதீனத்தை சேர்ந்தவர்களின் பங்களிப்புடன் செங்கோல் உருவாக்கப்பட்டது. 900 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஜனநாயக பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டது.

மக்களவையில் புனிதமான செங்கோல் வைக்கப்பட்டுள்ளது, இந்த செங்கோலுக்கு வரலாறு உண்டு. எப்போது விவாதம் நடந்தாலும், இச்செங்கோல் நமக்கு நியாயத்தை நினைவு படுத்திக்கொண்டே இருக்கும். இந்த புதிய நாடாளுமன்ற கட்டடம் சுய சார்பு இந்தியாவை ஒளிரச்செய்துள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் கலாச்சாரமும், அரசியல் சாசனமும் இணைந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் தான், உலக நாடுகளின் வளர்ச்சியும் அடங்கியுள்ளது. ஒரே இந்தியா வலிமையான இந்தியா; புதிய நாடாளுமன்றம் காலத்தின் தேவை.

பொற்காலத்திற்கு நுழைவதற்குள் பல தடைகளை தாண்டி வந்துள்ளோம். புதிய நாடாளுமன்றம் ஏழை, எளிய மக்களின் குரலாக ஒலிக்கும். 9 ஆண்டுகளில் ஏழை மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டிருக்கிறது. எம்.பி.க்கள் எண்ணிக்கை உயரவுள்ளதால் கூடுதல் இருக்கைகளுடன் புதிய நாடாளுமன்றம் அமைந்துள்ளது. தேசத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டுச்செல்ல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபதம் ஏற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story